பரியேறும் பெருமாள் நடிகர் நெல்லை தங்கராஜ் மறைவு.. கண்ணீரில் தெருக்கூத்து கலைஞர்கள்!

Baluchamy
Feb 03, 2023,12:55 PM IST
சென்னை: தெருக்கூத்து கலைஞர் மற்றும் பரியேறும் பெருமாள் பட நடிகர் நெல்லை தங்கராஜ் உடல்நலக்குறைவால் காலமானார். திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.



இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பரியேறும் பெருமாள்' படத்தில் நடத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் நெல்லை தங்கராஜ். சிறுவயதில் இருந்தே தெருக்கூத்து கலைஞராக பல மேடைநாடகங்களில் நடித்துள்ளார்.

சிறுவயதில் இருந்தே ஏழ்மையில் ஊறிப்போன நெல்லை தங்கராஜுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் மூலம் ஒளிவட்டம் தெரிந்தது. பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோ கதிரின் அப்பாவாக நடித்தார். தனது முதல் படத்திலேயே அற்பிதமான நடிப்பினால் ரசிகர்களின் கண்ணில் கண்ணீரை சொட்ட வைத்த தங்கராஜ், ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை திரும்பி பார்க்கவைத்தார்.

திரையுலகினரை தனது நடிப்பினால் இம்ப்ரெஸ் செய்த தங்கராஜுக்கு தொடர்ந்து படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. சிறியவயதில் இருந்தே ஏழ்மையில் இருந்தவருக்கு இனியாவது விடிவுகாலம் பிறக்கட்டும் என எண்ணிய நிலையில் மீண்டும் ஏழ்மை கட்டியணைத்தது. குடியிருக்க வீடு இல்லாமல் தவித்த நெல்லை தனகராஜுக்கு நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வீடு கட்டி கொடுக்கப்பட்டது. மேலும் தங்கராஜ் தனது புதிய வீட்டில் குடியேறிய புகைப்படம் இணையத்தளத்தில் வைரலானது.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நெல்லை தங்கராஜ் இன்று அதிகாலை 5 மணி அளவில் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.