நடிகர் நாக சைதன்யாவுக்கு மறுமணம்.. சோபிதா துலிபாலாவுடன் நிச்சயதார்த்தம்.. நாகார்ஜூனா தகவல்!

Meenakshi
Aug 08, 2024,02:26 PM IST

ஹைதராபாத்:   பிரபல நடிகர் நாக சைதன்யா, சோபிதா துலிபாலா  ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில், இன்று  திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது நாக சைதன்யாவுக்கு மறுமணம் ஆகும்.


நாகார்ஜூனா - அமலா தம்பதியின் மூத்த மகன் நாக சைதன்யா. நாக சைதன்யா தெலுங்கு சினிமா உலகில் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர். ஏ மாயா சேசாவே, மனம், லவ் ஸ்டோரி, மஜிலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் வெங்கட்பிரபு இயக்கத்தில் கஸ்டடி என்ற படத்தில் நடித்தார். தற்போது சாய் பல்லவியுடன் தண்டேல்  என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு மீனவனின் உண்மை கதை என்று செல்லப்படுகிறது.




இவருடன் நடிகை சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக் ஏ மாயா சேசாவே, மனம், மஜிலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களில் நடித்தபோதுதான் நாக சைதன்யா- சமந்தாவிற்கு காதல் ஏற்பட்ட நிலையில், இருவீட்டாரின் சம்மதத்துடன்  கடந்த 2017ம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் பிரபல ஜோடியாக வலம் வந்தனர். ஆனால் குறுகிய காலத்திலேயே  இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு பிரிவதாக அறிவித்து அவரவர் பாதையில் செல்ல ஆரம்பித்தனர்.


இந்த நிலையில், நடிகர் நாக சைதனயா நடிகை சோபிதாவுடன் நெருக்கமாக பழகி வருவதாகவும், இருவரும் அவுட்டிங், டேட்டிங் செய்து வருவதாகவும் கூறப்பட்டன. ஆனால் இது உண்மை இல்லை என்று அவர்களின் தரப்பில் இருந்து கூறப்பட்ட நிலையில் இன்று இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டது. இதை நாக சைதன்யாவின் தந்தையான நாகார்ஜூனாவே அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள எக்ஸ் பதிவில், என் மகன் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இன்று காலை நிச்சயதார்த்தம் நடந்ததை அறிவிப்பதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.


நடிகை சோபிதா, மணிரத்தினம் இயக்கி பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் வந்து போனவர் என்பது நினைவிருக்கலாம்.