"யாகாவா ராயினும் நாகாக்க".. மன்சூர் அலி கானுக்கு .. நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் குட்டு!

Meenakshi
Nov 20, 2023,08:11 PM IST

சென்னை: யாகாவா ராயினும் நா காக்க வேண்டும் என நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நடிகர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.


நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய அநாகரீகப் பேச்சுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. நடிகர்களுக்குள் ஒளிந்திருக்கும் வக்கிரத்திற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க திரைத்துறையினரே முன்வர வேண்டும் என்று பலத்த குரல்கள் எழுந்துள்ளன. 


இந்த நிலையில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான எம்.எஸ். பாஸ்கர், மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மிகவும் நாகரீகமான முறையில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் எம்.எஸ். பாஸ்கர்.




இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:


வணக்கம்! நான் நடிகர். எம்.எஸ்.பாஸ்கர்.


சமீபத்தில் வெளியான 'The Road' திரைப்படத்தில் திரிஷா அவர்களோடு நான் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அந்த படப்பிடிப்பு சமயத்தில் அவர் பழகிய விதமும், அனைவரிடமும் அவர் காட்டிய மரியாதையும் மனதை விட்டு அகலாதவை! மிகவும் தன்மையானவர். 


மரியாதைக்குரிய சகோதரர் திரு.மன்சூரலிகான் அவர்கள் 'லியோ' விழாவில் திரிஷா அவர்கள் பற்றியும், மடோனா அவர்கள் பற்றியும், திருமதி. குஷ்பூ அவர்கள் பற்றியும், திருமதி. ரோஜா அவர்கள் பற்றியும் பேசியது ரசிக்க தகுந்ததாக இல்லை! 


நகைச்சுவையாக பேசுகிறேன் என்று கேட்போர் மனம் புண்படும் விதத்தில் பேசலாமா? . இந்த பேச்சுக்கு வக்ர மனம் படைத்த சிலர் அவர் பேசிய நடிகைகள் குறித்து எவ்வாறு கமெண்ட் செய்திருக்கிறார்கள் என்று சகோதரர் பார்க்க வேண்டும். 


'எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு... பொழப்ப பாருங்கய்யா' என்று சொல்லும் சகோதரர் தற்போது பேசியிருப்பது உலகிற்கு தேவையான பிரச்சினையா? என்பதை சற்று சிந்தித்து பேசியிருக்க வேண்டும்.


சகோதரருக்கு இனி இவ்வாறு பேசாதீர்கள் என்று அன்பான வேண்டுகோள் வைப்பதுடன், உரிமையோடு கடும் கண்டனத்தையும் தெரிவிக்கின்றேன். 


"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"


என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் எம்.எஸ். பாஸ்கர்.