எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் குறித்த காட்சி.. மன்னிப்பு கேட்டார் நடிகர் மோகன்லால்

Su.tha Arivalagan
Mar 30, 2025,04:59 PM IST

திருவனந்தபுரம்: எம்புரான் படத்தில் குஜராத் கலவரம் குறித்த காட்சிகள் இடம் பெற்றது குறித்து நடிகர் மோகன்லால் மன்னிப்பு கேட்டுள்ளார். மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதாக அவர் தெரிவித்துள்ளார்.


பிருத்வி ராஜ் இயக்கத்தில், உருவான படம் லூசிபர். இதில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மிகப் பெரிய வெற்றியையும், வசூலையும் இப்படம் பெற்றது. இதையடுத்து தற்போது லூசிபர் படத்தின் 2ம் பாகத்தை, எம்புரான் என்ற பெயரில் எடுத்துள்ளார். இதில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


இப்படம் மிகப் பெரிய ஹிட்டாகியுள்ளது. 2 நாட்களில் ரூ. 100 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது. இப்படத்தில் 2002ம் ஆண்டு குஜராத்தில் வெடித்த முஸ்லீம்களுக்கு எதிரான கலவரம் குறித்த காட்சி இடம் பெற்றுள்ளது. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மோகன்லால் மன்னிப்பு கேட்டுள்ளார்.




இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறி்கை: லூசிபர் படத்தின் 2ம் பாகமான எம்புரான் படத்தில் இடம்பெற்ற அரசியல், சமூக நோக்கிலான சில கருத்துக்கள்  என்னுடைய ரசிகர்கள் பலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக அறிகிறேன். ஒரு கலைஞராக, எனது எந்தப் படமும், எந்த ஒரு அரசியல் அமைப்பு, மதம், கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக துவேஷம் பரப்புவதாக அமைக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.  அதை உறுதிப்படுத்த  வேண்டியது எனது கடமையாகும்.


எனவே எனது பிரியப்பட்ட ரசிகர்களுக்கு மன உளைச்சலோ, மன வருத்தமோ ஏற்பட்டிருந்தால் அதற்காக நானும், எனது படக் குழுவினரும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் சம்பந்தப்பட்ட காட்சிகளை படத்திலிருந்து எடுக்கவும் தீர்மானித்துள்ளோம்.


உங்களில் ஒருவனாக கடந்த 40 வருட கால சினிமா வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கிறேன்.  உங்களது அன்பும், நம்பிக்கையும்தான் எனது பலம்.  அதை விட மோகன்லால் பெரியவன் அல்ல என்று கூறியுள்ளார் மோகன்லால்.