வசனம் பேசிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பு.. மாரிமுத்துவின் கடைசி நிமிடங்கள்!

Su.tha Arivalagan
Sep 08, 2023,05:17 PM IST
சென்னை: எதிர்நீச்சல்  சீரியல் டப்பிங்கின்போதுதான் நடிகர் மாரிமுத்துவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனக்கு ஒரு மாதிரி ஆவதை உணர்ந்த அவர் உடனடியாக வெளியே வந்து மருத்துவமனைக்குப் புறப்பட்டுப் போயுள்ளார். அங்குதான் மரணம் சம்பவித்துள்ளது.

நடிகர் மாரிமுத்துவின் மரணம் அனைவரையும் உலுக்கியுள்ளது. யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. சமீப காலமாக படு வேகமாக புகழ் உச்சிக்குப் போனவர் மாரிமுத்து. வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்தவர். அவரிடமிருந்து பின்னர் இயக்குநராகும் ஆசையில் ராஜ்கிரண், சீமான், வசந்த், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோரிடம் உதவியாளராக இருந்துள்ளார். அதன் பிறகு இரு படங்களையும் இயக்கினார். பல படங்களில் நடித்தும் வந்தார்.

எதிர்நீச்சல் சீரியல்தான் அவருக்கு மிகப் பெரிய அளவுக்கு புகழையும், பெயரையும் பெற்றுக் கொடுத்தது. இந்த சீரியல் டப்பிங் பணியின்போதுதான் மாரிமுத்துவுக்கு மரணம் சம்பவித்துள்ளது. இதுகுறித்து அந்த சீரியலில் அவரது தம்பியாக நடித்து வந்த நடிகர் கமலேஷ் கூறுகையில், டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு மாதிரி மூச்சுத் திணறுவதாக கூறினார் மாரிமுத்து. பின்னர் வெளியே சற்று காற்றாட சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் காரில் ஏறி சென்று விட்டார். அவராகவே மருத்துவமனைக்கு போனதாக கருதுகிறேன்.

பின்னர் அவரது மகளுக்குப் போன் செய்தபோதுதான், அப்பாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு,  வட பழனியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும், உடனே வாங்க என்றும் கூறினார். இதையடுத்து அனைவரும் அங்கு புறப்பட்டுப் போனோம். ஆனால் அவரை வெறும் உடலாகத்தான் பார்க்க முடிந்தது. அவர் எங்களுக்கெல்லாம் அண்ணன்தான்.. அப்படித்தான் பழகினோம். நடிகராகவே நாங்கள் பார்க்கவில்லை. சமீபத்தில் கூட 200க்கும் மேற்பட்டோருக்கு பெரிய விருந்து கூட அளித்தார். மிக்ச சிறந்த மனிதர், அன்பானவர், நன்றாக பேசக் கூடியவர். அவரை இழந்து விட்டோம்.. மிகப் பெரிய இழப்பு இது என்றார் கமலேஷ்.