ஊரெல்லாம் கள்ளச்சாராய பிரச்சினை.. நல்ல சாராயம் காய்ச்சக் கற்றுக் கொடுக்கும்.. மன்சூர் அலிகான்!

Manjula Devi
Jul 01, 2024,05:04 PM IST

சென்னை: மன்சூர் அலிகான் நடித்த கடம்பான் பாறை டீசரை இன்று வெளியிட்டார். இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது. அதில் ஒரு சர்ச்சையும் அடங்கிக் கிடக்கிறது. சாராயம் எப்படிக் காய்ச்சுவது என்று அதில் சொல்லிக் கொடுத்துள்ளார் மன்சூர் அலிகான்.. அது தான் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடிகர் மன்சூர் அலிகான் தனது ராஜ் கென்னடி ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி தயாரிக்கும் கடம்பான் பாறை படத்தில் அவரது மகன் அலிகான் துக்ளக் நடித்துள்ளார். இளம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதில் அனுராகவி மற்றும் ஜெனி பெர்ணான்டஸ் என இரண்டு ஹுரோயின்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, ப்ளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல் கண்ணன் போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதிசிவன், கூல் சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.




இந்த படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த மாடன் உலகம் இன்றைய இளைஞர்களை தவறான பாதைக்கு எப்படி அழைத்துச் செல்கிறது.. அதனால் அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை சந்திக்கிறார்கள்.. என்பதை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைந்துள்ளதாம்.


இந்த நிலையில் மன்சூர் அலிகான் இயக்கி தயாரித்துள்ள கடம்பான் பாறை படத்தின் டீசரை இன்று வெளியிட்டார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் மனுஷனுக்கு போதை தேவை என மன்சூர் அலிகான் பேசும்,  கடம்பான் பாறை படத்தின் வீடியோ தற்போது சோசியல் மீடியா முழுவதும் வைரலாகி வருகிறது. 


இந்த டீசரில், எப்படி நல்ல சாராயம் காய்ச்சி காய்ச்ச வேண்டும் என்பது குறித்து அவர் விளக்கியுள்ளார். இதுதான் தற்போது வைரலாகியுள்ளது. அந்த காட்சியில் இடம் பெற்றுள்ள மன்சூர் அலிகானின் பேச்சு..


மனுஷனுக்கு போதை தேவை. நாட்டில் மக்களுக்கு நடக்கிற எல்லா கொடுமைகளுக்கும் வலி நிவாரணமாக இருக்கணும். வெள்ளைக்காரன் இதை ஒரு அருமருந்தாக தேவாமிர்தமாக தயாரிச்சு எவ்வளவு நாளைக்கு உயிர் வாழ்கிறான். ஆனால் நம்ம நாட்டுல பாதி இந்த அரசியல்வாதிகள் மண்ணுல கல்லுல, அந்த திட்டம் இந்த திட்டம், என எல்லா அடிக்கிற கொல்லையில பத்தாதுன்னு சாராய பேக்டரில் வைத்து தயாரிக்கிற சரக்குல எல்லாமே அட்டு. அடிச்சா கிட்னி, கணையம், கல்லீரல் என  எல்லாரும் அவுட். அதனால அல்பாயிஸ்ல செத்துப்போகிறான்.


ஆனா இந்த சோம பானம் கந்தர்வ கன்னிகள் காம  தேவர்களோட பருகிய ரசம் .ஆத்மார்த்த பானம். இதுல அத்திப்பழம், ஆலம்பழம், முந்திப்பழம், சாதி திராட்சை, கருப்பட்டி, கடுக்காய் கொட்டை, மழை வாழைப்பழம், பொந்தம் பழம், நாவல் கொட்டை, எல்லாத்தையும் போட்டு நானே கொல்லைப்புறத்தில் ஊறல் போட்டு வடிச்சு எடுத்த நல்ல சாராயம். இத அப்படியே அடிச்சா நரம்பு மண்டலம் எல்லாம் முறுக்கேறி அப்படியே கபாலம் வரைக்கும் பாயும். இந்தா புடி. இதை நீ அடி என்று பேசுகிறார் மன்சூர் அலிகான்.


இது எப்படியெல்லாம் பிரச்சினையை கொண்டு வரப் போகுதோ!