"தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றிகள் " : நடிகர் மாதவன்

Meenakshi
Mar 05, 2024,04:41 PM IST

சென்னை:  இறுதிச்சுற்று படத்திற்காக 2015ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதை எனக்கு வழங்கி கெளரவித்த தமிழ்நாடு அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்துள்ளார் நடிகர் மாதவன்.


2015ம் ஆண்டிற்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் நேற்று  அறிவிக்கப்பட்டன.விருதிற்காக தேர்வு செய்யப்பட்ட படங்களின் பட்டியல் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டது. தமிழக அரசின் திரைப்பட விருதுகள் விழா மார்ச் 6ம் தேதி நாளை மாலை சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை டி.எம்.ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெறுகிறது.


தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்., திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளை தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்க உள்ளார். விருதிற்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப் பரிசுகள், சான்றிதழ்கள் ஆகியன வழங்கப்பட உள்ளன.




இதில் சிறந்த படத்திற்கான சிறப்பு பரிசு, சிறந்த நடிகருக்கான பரிசு, சிறந்த நடிகைக்கான சிறப்பு பரிசு, சிறந்த இயக்குனருக்கான பரிசு, சிறந்த ஒப்பனை கலைஞருக்கான பரிசு, சிறந்த பின்னணி குரல் பெண் ஆகிய ஆறு விருதுகள் வென்றுள்ளது இறுதிச் சுற்று படம். சிறந்த நடிகருக்கான பரிசு பெற்ற நடிகர் மாதவன் அதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


இறுதிச்சுற்று திரைப்படத்திற்காக 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதை எனக்கு வழங்கி கௌரவித்த தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். மேலும் வெற்றி பெற்ற சக வெற்றியாளர்களான சுதா கொங்கரா, ஜோதிகா, ரித்திகா சிங், கௌதம் கார்த்திக், அரவிந்த் சாமி,  ஜிப்ரான் ஆகியோருக்கும் எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.