புகார்கள் வலி தருகின்றன.. நான் தவறு செய்யவில்லை.. சட்டப்படி இதை சந்திப்பேன்.. நடிகர் ஜெயசூர்யா

Su.tha Arivalagan
Sep 01, 2024,10:09 AM IST

கொச்சி: என் மீதான புகார்கள் எனக்கு வலியைக் கொடுத்துள்ளன. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. சட்டப்படி இதை சந்திப்பேன் என்று மலையாள நடிகர் ஜெயசூர்யா கூறியுள்ளார்.


மலையாளத் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு நடிகர்கள், டெக்னீஷியன்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. அதில் ஒருவர்தான் ஜெயசூர்யா. அவர் மீதும் பல்வேறு புகார்கள் எழவே போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் தன் மீதான புகார்கள் குறித்து ஜெயசூர்யா விளக்கம் அளித்துள்ளார்.




இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதை சட்டரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளேன். எனது சட்ட குழு இதுதொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. மனசாட்சி இல்லாமல் யார் வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும் புகார்களை வைக்கலாம். பாலியல் அத்துமீறல் என்பது எப்படி மிகப் பெரிய துன்புறுத்தலோ அதுபோலத்தான பொய்க் குற்றச்சாட்டை சுமப்பவர்களுக்கும் அது மிகப் பெரிய துன்புறுத்தல்.


பொய், உண்மையை விட வேகமாக பயணிக்கும். ஆனால் உண்மையே வெல்லும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. அனைத்து சட்ட நடவடிக்கைகளும் நான் அப்பாவி என்பதை நிரூபிக்கும். நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எனது பிறந்த நாளை மிகவும் வலி நிறைந்ததாக மாற்றிய அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார் ஜெயசூர்யா.


கடந்த 2013ம் ஆண்டு நடந்த படப்பிடிப்பின்போது நடிகர் ஜெயசூர்யா தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக நடிகை மீனு முனீர் புகார் கூறியுள்ளார். தான் டாய்லெட்டுக்குப் போய் விட்டு வந்தபோது பின்னாலிருந்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாக அவர் கூறியிருந்தார். நான் அதிர்ச்சி அடைந்து அவரிடமிருந்து விடுபட்ட தப்பி ஓடி விட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார். இந்தப் புகாரை ஜெயசூர்யா மறுத்துள்ளார். இதே மீனு முனீர், நடிகர் முகேஷ் மீதும் புகார் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்