குருவாயூர் கோவிலில்.. சிம்பிளாக நடந்த ஜெயராம் மகள் மாளவிகா திருமணம்.. குவியும் வாழ்த்து!

Manjula Devi
May 03, 2024,12:35 PM IST

குருவாயூர்: நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகாவுக்கும், நவ்நீத் என்பவருக்கும் இன்று காலை பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவில் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இவர்களுடைய திருமண புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


நடிகர் ஜெயராம் தமிழில், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் சிறந்த நடிகராக வலம் வருபவர்.  நடிகர் ஜெயராம் தமிழில் அறிமுகமான முதல் படமான,  முறைமாமன் படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தெனாலி, பஞ்சதந்திரம் ஆகிய படங்கள் மக்களை வெகுவாக கவர்ந்தது. இவருடைய எதார்த்தமான நடிப்பில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். 




நடிகர் விஜயுடன் துப்பாக்கி படத்தில் காமெடி கலந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இவருடைய காமெடி கதைக்களம் இன்றுவரை மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இது தவிர தளபதி விஜய் நடிப்பில் வெளிவர உள்ள கோட் திரைப்படத்திலும் ஜெயராம் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழும் மலையாளத்திலும் கலக்கும் நடிகர் ஜெயராம் மற்றும் பார்வதி தம்பதிக்கு காளிதாஸ் என்ற மகன் மற்றும் மாளவிகா என்ற மகள் உள்ளனர். ஜெயராம் மகன் காளிதாஸ் ஏற்கனவே தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக திகழ்கிறார். நடிகர் காளிதாசும் தந்தையைப் போலவே மலையாளத்திலும் தமிழிலும் நடித்து வருகிறார். மாளவிகா ஜெயராம் நிச்சயதார்த்தம் கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்ததாகவும், எனக்கு இன்னொரு மகன் கிடைத்துவிட்டார் எனவும் நடிகர் ஜெயராம் ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு புகைப்படம் வெளியிட்டு இருந்தார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.


இந்த நிலையில் நட்சத்திரங்களின் திருமண வைபவம் என்றாலேயே ஆட்டம் பாட்டம் கோலாகலம் ட்ரெண்டிங் தான். ஆனால் ஜெயராம் வீட்டு திருமணம் மிகவும் எளிமையாக கேரள முறைப்படி இன்று குருவாயூர் கோயிலில் நடைபெற்றது. உறவினர்கள் புடைசூழ ஜெயராமின் மகள் மாளவிகாவுக்கும், காதலன் நவ்நீத்துக்கும் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். பல்வேறு நடிகர், நடிகைகள் உட்பட ரசிகர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.