இயக்குநர் - நடிகர் மாரிமுத்து  திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!

Su.tha Arivalagan
Sep 08, 2023,05:16 PM IST

சென்னை: இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகினரையும், சின்னத்திரை உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


56 வயதான மாரிமுத்து சமீப காலமாக தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வந்தவர்.  அவரது மரணச் செய்தி யாரும் எதிர்பாராத நிலையில் வந்து சேர்ந்துள்ளது.




இன்று காலை கடுமையான மாரடைப்பால் மாரிமுத்து மரணமடைந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் கூட சிகிச்சை பலனளிக்காமல் மாரிமுத்து மரணமடைந்துள்ளார். 


மாரிமுத்து இயக்குநராக பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து செயல்பட்டவர். கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். வாலி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.


பரியேறும் பெருமாள் படத்தில் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். ஜெயிலர் படத்திலும் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளார் மாரிமுத்து. 


இத்தனை நடித்தும் கூட அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது எதிர்நீச்சல் நாடகம்தான். அந்த சீரியலில் மாரிமுத்து அதகளப்படுத்தி வந்தார். அந்த நாடத்தில் அவரது நடிப்பும், பாடி லாங்குவேஜ் ஆகியவை அத்தனை பேரையும் வியக்க வைத்தது. மேலும் அவர் பயன்படுத்தி வந்த ஏம்மா ஏய் என்ற வசனம் படு வேகமாகப் பிரபலமானது.


தனது மொத்த திரையுலக அனுபவத்தையும் இந்த சீரியலில் வெளிப்படுத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தவர் மாரிமுத்து. முற்போக்கு சிந்தனையாளராகவும் வலம் வந்தவர் மாரிமுத்து. சமீபத்தில் கூட ஒரு டிவி நிகழ்ச்சியில் ஜோதிடர்கள் குறித்து அவர் பேசிய பேச்சு பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.


மாரிமுத்துவின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மிகச் சிறந்த கலைஞரை திரைத்துறையும், தொலைக்காட்சித் துறையும் இழந்துள்ளன.