"அடிச்சுக் கூட கேப்பாங்க.. அப்பவும் சொல்லிராதீங்க".. மறைந்தார் நடிகர் போண்டா மணி!

Su.tha Arivalagan
Dec 24, 2023,07:32 AM IST

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி மாரடைப்பால் மரணமடைந்தார்.


தமிழில் ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் போண்டா மணி. விவேக், வடிவேலு  உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். சின்னச் சின்ன கேரக்டர்களில் வந்தாலும் கூட மக்கள் மனதில் நச்சென்று நிற்கும் வகையிலான பாத்திரங்களில் நடித்தவர்.


அடிச்சுக் கூட கேப்பாங்க அப்பயும் சொல்லிராதீக, சீப்பை ஒளிச்சு வச்சுட்டேன் பார்த்தீங்களா என்பன போன்ற காமெடி வசனங்களால் பிரபலமானவர் போண்டா மணி.




விவேக் மறைவு மற்றும் வடிவேலுவுக்கு வாய்ப்பு குறைவு போன்ற காரணங்களால் இவருக்கும் வாய்ப்புகள் குறைந்த போயின. இதனால் சமீப காலமாக அவர் அதிக படங்களில் நடிக்க முடியவில்லை. மேலும், அவருக்கு உடல் நலக்குறைவும் ஏற்பட்டு சிரமப்பட்டு வந்தார்.


இந்த நிலையில் அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிகிச்சை பெற்று வந்தார். அவரது சிகிச்சைக்கு உதவுமாறு சக நடிகர்கள் கோரிக்கையும் விடுத்து வந்தனர். இந்த நிலையில்தான் போண்டாமணி திடீர் மாரடைப்பால் மரணத்தைத் தழுவினார். வீட்டில் திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர்  ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.


60 வயதாகும் போண்டா மணி இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர். பவுனு பவுனுதான் என்ற படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.  மருதமலை, சுந்தரா டிராவல்ஸ், வேலாயுதம், வின்னர் உள்பட பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். பெரும்பாலும் வடிவேலு, விவேக் டீமுடன் இணைந்து கலக்கியிருப்பார்.