அஜீத்குமாருக்கு மூளையில் கட்டி இல்லை.. மேலாளர் விளக்கம்.. நலம் பெற எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

Meenakshi
Mar 08, 2024,09:53 PM IST

சென்னை: நடிகர் அஜித்குமார் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் அஜித்குமார்.  அஜித் ஒரு நடிகர் மட்டும் அல்ல, ஒரு  நல்ல பைக் ரேஸ்ஸரும் கூட. அவர் பைக் ரேஸ் ஓட்டும் போது விபத்து ஏற்பட்ட நிலையில் உடம்பில் ஏகப்பட்ட காயங்கள் உள்ளன. நிறைய அறுவைச் சிகிச்சை உள்ளிட்டவற்றை மேற்கொண்டுள்ளார். தனது உடல் நிலை குறித்து அவ்வப்போது அவர் செக்கப் செய்து கொள்வது வழக்கம். 




இந்த நிலையில், நேற்று  நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அஜித்திற்கு மூளையில் கட்டி இருப்பதால் தான் மருத்துவமனையில் தங்கியிருக்கிறார் என்ற செய்தி தீயாக பரவியது.  ஆனால் அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அதை மறுத்து விளக்கம் அளித்துள்ளார். 


அதில், நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் கட்டி என்பதெல்லாம் உண்மையில்லை. வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது காதுக்கு கீழே, நரம்பு வீக்கம் இருந்தது கண்டறியப்பட்ட அரை மணி நேரத்தில் அதற்கான சிகிச்சை முடிந்தது. நேற்றிரவே சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனையில் இருந்து இரவு அல்லது நாளை வீடு திரும்புவார் எனவும் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அஜித் குமார் நலம் பெற எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சிகிச்சை பெற்று வரும் சகோதரர் நடிகர் அஜித்குமார் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.