நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

Meenakshi
Mar 09, 2024,02:58 PM IST
சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்குமார் தற்பொழுது நல்ல உடல் நிலையுடன் வீடு திரும்பியுள்ளார். இந்த தகவலை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.

லைகா தயாரிப்பில் நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ்,ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர்  நடித்து வருகின்றனர். பல மாதங்களாக அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. இந்த படம் மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தான் ஷூட்டிங் முடிந்து அஜித் சென்னை திரும்பியுள்ளார்.  

பைக் ஓட்டுவதில் ஆர்வம் கொண்ட அஜித்குமாருக்கு பைக் ரேஸ் ஓட்டும் போது விபத்து ஏற்றப்பட்ட நிலையில் உடம்பில் ஏகப்பட்ட காயங்கள் உள்ளன. அதற்காக அவர் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்.இந்நிலையில், நேற்று  நடிகர் அஜித்குமார் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான செக்கப்பிற்காக அனுமதிக்கப்பட்டார்.

வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அஜித்குமார் இன்று வீடு திரும்ப உள்ளார். விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல உள்ள நிலையில் நடிகர் அஜித்துக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று அவர் வீடு திரும்பாமல் மருத்துவமனையில் தங்கியதால், அஜித்திற்கு என்னாயிற்று என்று ரசிகள் கலக்கம் அடைந்தனர்.




அஜித்திற்கு மூளையில் கட்டி இருப்பதால் தான் மருத்துவமனையில் தங்கியிருக்கிறார் என்ற செய்தி தீயாக பரவியது. இந்நிலையில் அது குறித்து அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். அதில், நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் கட்டி என்பதெல்லாம் உண்மையில்லை. வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட போது காதுக்கு கீழே, நரம்பு வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டு, அரை மணி நேரத்தில் அதற்கான சிகிச்சை முடிந்தது. நேற்றிரவே சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் எனவும், அப்போலோ மருத்துவமனையில் இருந்து இரவு அல்லது நாளை வீடு திரும்புவார் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அஜித்குமார் இன்று வீடு திரும்பியுள்ளார்.காதுக்கு அருகே வீக்கத்தை சரி செய்வதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டது.மருத்துவமனையில் ஓய்வு எடுத்த அஜித்குமார் இன்று அதிகாலையில் வீடு திரும்பியதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தகவல் தெரிவித்துள்ளார்.