நடிகர் அஜித்துக்கு என்னாச்சு?.. அப்பலோ மருத்துவமனையில் அனுமதி.. வழக்கமான செக்கப் என தகவல்!

Meenakshi
Mar 07, 2024,03:48 PM IST

சென்னை: நடிகர் அஜித்குமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் நலப் பரிசோதனைக்காக என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜீத்தின் உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த், ஷாலினி அஜீத்துக்கு போன் செய்து நலம் விசாரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


தமிழ் திரையுலகில்  முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அஜித்குமார். பைக் ரேஸ்  மற்றும் பைக் ஸ்டன்ட்டின் போது ஏற்பட்ட விபத்தினால், அஜித் குமார் உடம்பில் ஏகப்பட்ட அறுவைச் சிகிச்சைகள் நடந்துள்ளன. இதற்காக அவர் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். 


தற்போது லைகா தயாரிப்பில் நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.


பல மாதங்களாக அஜர்பைஜானில் தான் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. இந்த படம் மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தான் ஷூட்டிங் முடிந்து அஜித் சென்னை திரும்பியுள்ளார்.  சென்னை வந்த அவர் மார்ச் 2ம் தேதி தனது மகனின் பிறந்த நாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடினார். அந்த புகைப்படங்களை அஜித் மனைவி ஷாலினி இணையதள பக்கங்களில் ஷேர் செய்திருந்தார்.




இந்நிலையில், இன்று நடிகர் அஜித்குமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அஜித்குமார் இன்றே வீடு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல உள்ள நிலையில் நடிகர் அஜித்துக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 


இது குறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கூறுகையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் அஜித்குமார் மருத்துவமனை சென்றுள்ளார். விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜித்குமார் அஜர்பைஜான் செல்ல உள்ளார்.அஜர்பைஜானில் வரும் 15ம் தேதி நடைபெறும் படப்பபிடிப்பில் அஜித் கலந்து கொள்வார் என்று கூறியுள்ளார்.