த்ரிஷா குறித்து அவதூறு பேச்சு.. சேலம் ஏ.வி.ராஜூ மீது நடவடிக்கை எடுங்க.. இயக்குனர் சேரன் ஆவேசம்!

Meenakshi
Feb 20, 2024,05:43 PM IST

சென்னை: நடிகை திரிஷா குறித்த அவதூறு பரப்பும் சேலம் மேற்கு அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ வி ராஜு மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குநர் சேரன் வலியுறுத்தியுள்ளார்.


சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜூ. இவர் சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதும், அவரது ஆதரவாளரான சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.  இதையடுத்து அவரை கட்சியை விட்டு நீக்கினார் எடப்பாடி பழனிச்சாமி.


இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜு, எடப்பாடி பழனிச்சாமி மீது சரமாரியான புகார்களைத் தெரிவித்தார். பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். குறிப்பாக ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக உடைந்தபோது, கூவத்தூர் ரிசார்ட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தபோது சம்பவம் குறித்த சில கருத்துக்களை பகிர்ந்தார். இது திரைத்துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக  நடிகை த்ரிஷா குறித்து மிகவும் அவதூறான கருத்துக்களையும் அவர்தெரிவித்திருந்தார்.




ராஜூ பேசிய  அவதூறு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியது.அது மட்டும் இன்றி பல்வேறு தரப்பினரின் கடும் கண்டனங்களையும் பெற்றது. இது தொடர்பாக பலரும் ராஜுவைக்  கண்டித்திருந்தனர்.


இயக்குனர் சேரன் தனது எக்ஸ் பக்கத்தில், அதிமுக பிரமுகர் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.. எந்த ஆதாரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்... நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.