"நாங்க இருக்கோம்டா செல்லம்".. கைவிடப்பட்ட பெண் குழந்தையை தத்தெடுக்க போட்டா போட்டி!

Su.tha Arivalagan
May 06, 2023,03:10 PM IST
வேலூர்: காட்பாடி ரயில் நிலையத்தில் அநாதரவாக விடப்பட்ட பெண் குழந்தையை தத்தெடுக்க 10 தம்பதிகள் முன்வந்துள்ளதாக அரசு கால்நடை மருத்துவரும், சமூக சேவகருமான டாக்டர் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

பிறந்த பச்சிளம் குழந்தையான இந்த பெண் குழந்தை, காட்பாடி ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. அதை மீட்டு உடனடியாக குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். குழந்தைக்கு முழுமையான பரிசோதனை செய்யப்பட்டது. குழந்தை தற்போது ஆரோக்கியமாக உள்ளது.

முன்னதாக இக்குழந்தையை காட்பாடி ரயில் நிலையத்துக்குக் கொண்டு வந்த பெண், சிசுவை, அங்கிருந்த வயதான தம்பதியிடம் கொடுத்து டாய்லெட் போய் விட்டு வருகிறேன். பார்த்துக்கங்க என்று கூறிச் சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை. இதையடுத்து அந்தத் தம்பதி ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.



இந்தத் தகவல் கிடைத்ததும் டாக்டர் ரவிசங்கர் குழந்தை குறித்த தகவலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் போட்டார்.இதைப் பார்த்து அவருக்கு ஏகப்பட்ட பேர் போன் செய்துள்ளனர். இதுகுறித்து டாக்டர் ரவிசங்கர் கூறுகையில், 10 தம்பதிகள் போன் செய்துள்ளனர். வேலூரைச் சேர்ந்தவர்கல் அனைவருமே. குழந்தையைத் தத்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றார்.

இதற்கிடையே குழந்தையின் எதிர்காலம் குறித்துத் தீர்மானிக்க கலெக்டர் குமரவேல் பாண்டியன் குழு ஒன்றை அமைக்கவுள்ளார். அதன் பின்னரே குழந்தை யாருக்கு தத்து கொடுக்கப்படும் என்பது குறித்துத் தெரியவரும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.