டில்லியில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர பாஜக சதி... அடித்துச் சொல்லும் ஆம் ஆத்மி

Aadmika
Apr 12, 2024,01:06 PM IST

டில்லி : டில்லியில் ஆம்ஆத்மி தலைமையிலான ஆட்சியை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பாஜக சதி செய்து வருவதாக ஆம்ஆத்மி கட்சியின் அமைச்சர் அதிஷி குற்றம்சாட்டி உள்ளார். 


மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அவரது ஜாமீன் மனுவும் சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டில்லி அமைச்சர் அதிஷி, டில்லியில் நடக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசை சீர்குலைத்து விட்டு, ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர மத்தியில் ஆளும் பாஜக அரசு சதி செய்து வருவதாக எங்களுக்கு நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. டில்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் தாமதிப்பதால் பல துறைகளிலும் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. டில்லியில் அரசு துறைகளில் பணியிட மாற்றம், புதிய நியமனம், தேர்தல் காரணமாக அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் என எதுவும் நடக்கவில்லை. 




எந்த ஆதாரமும் இல்லாமல் பொய்யான ஒரு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். நிறைய சதி வேலைகள் டில்லி அரசை கவிழ்க்க நடப்பது அப்பட்டமாக தெரிகிறது. அரசியல் சதி, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை பாஜக தொடர்ந்து ஆம்ஆத்மிக்கு எதிராக செய்து வருகிறது. விசாரணை ஏஜன்சிகள் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றன. டில்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்காக செய்து வரும் இலவச மின்சாரம், தண்ணீர், மொகலா கிளினிக்கள், நல்ல கல்வி, பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுவது போன்றவற்றை நிறுத்துவதற்காகவே கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார் என பாஜக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.


இதற்கு பதிலளித்துள்ள டில்லி பாஜக தலைவர் வீரேந்திர சவ்தேவா, 62 எம்எல்ஏ.,க்களை வைத்துள்ள கட்சி, ஜனாதிபதி ஆட்சி வந்து விடுமோ என பயப்படுவது ஆச்சரியமாக உள்ளது. அவர்கள் கட்சி எம்எல்ஏ.,க்கள் கட்சியை விட்டு சென்று விட்டால் மெஜாரிட்டியை இழக்க வேண்டி வருமோ என்ற பயத்தில் தான் அதிஷி இப்படி பேசுகிறார். இப்படி பயந்து ஆட்சி நடத்துவதற்கு கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு போகட்டுமே. புதிய முதல்வர், டில்லியை சரியாக நிர்வகிக்க தெரிந்த ஒருவரிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு போகலாமே என தெரிவித்துள்ளார்.