ஆனி திருமஞ்சனம் 2024 : சிவபெருமானுக்கான நாள்.. குறையாத ஆனந்தத்தை அள்ளித் தரும் திருநாள்!

Aadmika
Jul 12, 2024,10:24 AM IST

சென்னை : சிவ பெருமானுக்குரிய முக்கிய வழிபாட்டு நாட்களில் ஒன்று ஆனி திருமஞ்சனம் ஆகும். ஆனி மாதத்தில் வரும் உத்திரத்தில், நடராஜருக்கு நடத்தப்படும் மகா அபிஷேகத்தையே ஆனி திருமஞ்சனம் என போற்றுகின்றோம்.


சிவ பெருமானின் 64 ரூபங்களில் ஒன்று நடராஜ ரூபம். சிவனின் அனைத்து ரூபங்களுக்கும் தினந்தோறும் அபிஷேகம் நடைபெறும். ஆனால் ஆடல் கலையின் நாயகனான நடராஜருக்கு மட்டும் வருடத்தில் ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும். சித்திரை மாத திருவோண நட்சத்திரம், ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரம், ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி, மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம், மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி ஆகிய நாட்களில் மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும்.




இவற்றில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் நடைபெறும் அபிஷேகத்தை ஆருத்ரா தரிசனம் என்றும், ஆனி மாத உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் அபிஷேகத்தை ஆனி திருமஞ்சனம் என்றும் குறிப்பிடுகிறோம். மற்ற நான்கு அபிஷேகங்களும் மாலையிலேயே நடைபெறும். ஆனால் மார்கழி மாத அபிஷேகமும், ஆனி மாத அபிஷேகமும் மட்டுமே அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு நடைபெறும், பொதுவாக சிவனுக்கு நடத்தப்படும் அபிஷேகங்கள் அனைத்தும் 24 நிமிடங்கள் மட்டுமே நடத்த வேண்டும் என ஆகம சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஆனால் நடராஜருக்கு நடத்தப்படும் அபிஷேகங்கள் 3 மணி நேரம் நடத்தப்படும்.


தேவர்களின் காலை பொழுதாக கருதப்படும் மார்கழி மாத ஆருத்ரா தரிசனமும், தேவர்களின் மாலை பொழுது என்பதால் ஆனி மாத உத்திர நட்சத்திர அபிஷேகமும் சிறப்பானதாக கருதப்படுகின்றன. இந்த நாளில் அனைத்து சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடத்தப்படும். ஆனி உத்திரத்தில் நடராஜருக்கு நடைபெறும் மகா அபிஷேகத்தை காண சித்தர்களும், முனிவர்களும் சிவாலயங்களுக்கு வருவதாக ஐதீகம். பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் சிதம்பரத்தில் ஆனி திருமஞ்சனம் 10 நாட்கள் விழாவாக நடத்தப்படும்.


ஆனி திருமஞ்சன விழாவின் 9ம் நாளில் திருத்தேரோட்டம் நடைபெறும். அன்று பஞ்ச மூர்த்திகளுடன், மூலவரான நடராஜ மூர்த்தியே திருத்தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் செய்யும் திருக்காட்சி நடைபெறும். ஆனி திருமஞ்சனத்தை தரிசிப்பதும், ஆனி திருமஞ்சனத்தன்று சிவ பெருமானை தரிசிப்பதும் பல கோடி புண்ணியத்தை தரும். ஆயுள் பலம் அதிகரிக்கும். பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும். செல்வம் சேரும், ஆனந்தமயமான, நிம்மதியான வாழ்க்கை அமையும்.


இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆனி திருமஞ்சனம் இந்த ஆண்டு ஜூலை 12ம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று அமைந்துள்ளது. ஜூலை 11ம் தேதி பகல் 01.47 மணிக்கே உத்திரம் நட்சத்திரம் துவங்கி விடுகிறது. ஜூலை 12ம் தேதி மாலை 04.20 வரை உத்திரம் நட்சத்திரம் உள்ளது. அதனால் இந்த நாளில் சிவ பெருமானை வழிபடுவதால் அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும்.