கோலாகலமாக நடந்த சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு

Meenakshi
Jul 11, 2024,02:28 PM IST

கடலூர்:  சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் இன்று கோலகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பர நடராஜர் கோயில் பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயில் உலக பிரசித்த பெற்றதாகும், இந்த கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.  விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. 100 டன் எடை, 74 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தேரில் நடராஜ பெருமாள் எழுத்தருளி காட்சி தந்தார். இந்த தேரோட்டத்தில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாய என பக்தி முழக்கமிட்டபடியே தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.




பக்தர்கள் வெள்ளத்தில் திருதேர் அசைந்தாடி வந்தது. தேரோட்டத்தின் போது, பக்தர்கள், சிவனடியார்கள் சிவ வாத்தியங்களை முழங்கிய படி சென்றனர். தனித்தனியே அலங்கரிக்கப்பட்ட தேர்களில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சாமிகள் தனித்தனியாக தேர்களில் எழுந்தருளினார்கள். சிதம்பரம் கீழவீதியில் துவங்கி 4 மாட வீதிகளையும் தேர் வலம் வந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.


நான்கு வீதிகளையும் தேர் வலம் வந்த பிறது இரவு நிலைக்கு வரும். அதன்பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும், நாளை காலை பல்வேறு பூஜைகள், ஆராதனை, அர்ச்சனைகள் நடைபெற்ற பிறகு மதியத்திற்கு மேல்  ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெறும். திருவிழாவின் இறுதி நாளான சனிக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.