காங். திட்டம் தோல்வி.. ஹரியானாவில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி.. 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Meenakshi
Sep 10, 2024,04:30 PM IST

சண்டிகர்:   காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே தேர்தல்  கூட்டணி பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால்,  ஹரியானாவில் தனித்துப் போட்டி என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இந்நிலையில் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி.


ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி இணைந்து போட்டியிட லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி திட்டமிட்டிருந்தார். ஆனால் இது பலன் தர வில்லை. ராகுல்காந்தி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், தற்போது ஹரியானாவில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. காங்கிரசும் தனித்து போட்டியிட தயாராகி வருகிறது.




ஹரியானா மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன. இங்கு கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது பாஜக அரசு. இந்நிலையில் ஹரியானாவில் பாஜகவிற்கு எதிரான அதிருப்தி அலை பெரும் சூறாவளியாக வீசுகிறது. இதனை சாதகமாக்கி பாஜகவை காலி செய்து விட்டு காங்கிரஸ் ஆட்சி அமைக்க திட்டம் தீட்டி கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுகிறது. மெகா கூட்டணி உருவாகும் என்று எண்ணியிருந்த நிலையில், இந்த கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது.


நேற்று ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடுவதாக தெரிவித்தது. ராகுல்காந்தியின் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைக்கு ஆரம்பம் முதலே பிடி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா. முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் ஆம் ஆத்மி கட்சி தற்போது 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் அமெரிக்காவில் இருக்கும் ராகுல்காந்திக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தேர்தலை தனித்து சந்திக்க காங்கிரஸும் தயாராக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்