ஆடித்தபசு: "சங்கரனும் நானே.. நாராயணனும் நானே".. ஊசி முனையில் தவம் செய்த பார்வதி!

Aadmika
Aug 01, 2023,10:14 AM IST
சென்னை : ஆடி  என்பது அம்மனை வழிபடுவதற்கு ஏற்ற மாதம் மட்டுமல்ல. தவம் செய்து, வேண்டிய வரங்களை பெறுவதற்கு அம்மனே தேர்ந்தெடுத்த மாதம் தான் ஆடி மாதம். அம்மன் வேண்டிய வரத்தை பெறுவதற்காக ஊசி முனையில் தவம் செய்து, வரத்தை பெற்ற நாள் இந்த ஆடித்தபசு நாளாகும்.

நாகலோக அரசர்களான சங்கன், பதுமன் ஆகியோர் நண்பர்களாக இருந்தாலும் வழிபாடு விஷயத்தில் மட்டும் வேற்றுமை இருந்து கொண்டே இருந்தது. தான் வழிபடும் சிவன் தான் பெரியவர் என சங்கனும், தான் வழிபடும் நாராயணன் தான் அனைத்தையும் விட உயர்வான தெய்வம் என்று பதுமனும் வாதம் செய்து வந்தனர். தங்களுக்கு நீண்ட காலமாக இருக்கும் இந்த பிரச்சனைக்கு முடிவை பெறுவதற்காக இருவரும் பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவியோ, இவர்களின் பிரச்சனையை கேட்டு விட்டு, சிவன் - விஷ்ணு இருவரும் ஒருவர் தான் என்று பதிலளித்தார்.



அதெப்படி இருவரையும் ஒருவர் என ஏற்றுக் கொள்ள முடியும் என இருவரும் பார்வதியை பார்த்து கேட்டனர். இதனால் இது பற்றி யோசித்த பார்வதி, சிவனிடமே சென்று இது பற்றி முறையிட்டாள். சிவனும் விஷ்ணுவும் ஒருவர் தான் என்பதை உலக மக்களுக்கு நிரூபிக்க நீங்கள் இருவரும் ஒரே ரூபமாக காட்சி தர வேண்டும் என வேண்டினாள். அது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. உயர்வான ஒரு விஷயத்தை பெற வேண்டும் என்றால் அதற்கு கடும் தவம் புரிந்தால் தான் பலன் கிடைக்கும் என்றார் சிவ பெருமான்.

உலக மக்கள் ஒரு உயர்வான விஷயத்தை தெரிந்து கொள்ள நானே சென்று தவம் இருக்கிறேன் என்ற பார்வதி, எங்கு தவம் செய்ய வேண்டும் என சிவனிடமே கேட்டாள். புன்னை மரங்கள் நிறைந்த காட்டில் ஏராளமான முனிவர்களும் ரிஷிகளும் புன்னை மரமாக இருந்து என்னை நோக்கி தவம் செய்கிறார்கள் அவர்களுடன் சேர்ந்து நீயும் தவம் செய். உரிய காலம் வரும் போது நாங்கள் இருவரும் வந்து உனக்கு காட்சி தருவோம் என்றார். அதன்படி பார்வதி தேவி, தவக்கோலத்தில் தவம் செய்ய புறப்பட்டாள்.

பார்வதியுடன் தேவ மாதர்கள் பலரும் தாங்களும் வருவதாக கூறி பசுவின் ரூபத்தில் புன்னை வனத்திற்கு வந்தனர். அங்கு ஊசி முனையில் நின்று கடும் தவம் புரிந்தாள் பார்வதி. இந்த இடம் தான் இன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் என அழைக்கப்படுகிறது. கோவாகிய பசு கூட்டத்துடன் வந்து தவம் செய்ததால் அன்னை கோமதி என்றும், ஆவுடை நாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். பார்வதியின் தவத்தை ஏற்று, சங்கரன் பாதி, நாராயணன் பாதியாக சங்கர நாராயணராக காட்சி கொடுத்த நாள் தான் ஆடி மாதம் பெளர்ணமி நாள். இந்த நாளையே ஆடித்தபசு என்று இன்று சங்கரன் கோவிலில் வெகு விமர்சையாகக் கொண்டாடுகிறார்கள். 

இத்தகைய உயர்வான ஆடித்தபசு நாள் இந்த ஆண்டு ஆகஸ்ட் 01 ம் தேதி வருகிறது. இந்த ஆண்டு பெளர்ணமி, ஆடித்தபசு, ஆடிச் செவ்வாய், திருவோண விரதம் என அனைத்தும் ஒரே நாளில் இணைந்து வருவது மற்றொரு தனிச்சிறப்பாகும்.