கோடி கோடி நலன்களை அள்ளித் தரும் ஆடிப்பூரம்

Aadmika
Jul 22, 2023,09:24 AM IST
சென்னை : ஆடி மாதத்தின் அனைத்து நாட்களும் அம்மனை வழிபட்டு, வேண்டிய வரங்களை பெறுவதற்கு ஏற்ற நாளாகும். 

இருந்தாலும் ஆடி மாதத்தில் வரும் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி பூரம், ஆடிப்பெருக்கு ஆகிய நாட்கள் அம்மனை வழிபட மிகவும் ஏற்ற நாட்களாகும். இதில் சிறப்பான ஆடிப்பூரம் நாம் உலகத்தை காப்பதற்காக அன்னை உமாதேவி அவதரித்த நாளாக கருதப்படுகிறது. இது பூதேவியின் அம்சமான ஆண்டாள் நாச்சியார் அவதரித்த தினமாகும்.



சைவ - வைணவ பேதமின்றுி அனைத்து கோவில்களிலும் ஆடிப்பூரம் சிறப்பாகக் கொண்டாடடும். ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம், ஊஞ்சல் உற்சவம், பால் குட யாத்திரைகள் ஆகியன நடத்தப்படும். இந்த ஆண்டு ஆடிப்பூரமானது ஜூலை மாதம் 22 ம் தேதி சனிக்கிழமை வருகிறது. பூரம் நட்சத்திரமான ஜூலை 21 ம் தேதி மாலை துவங்கி, ஜூலை 22 ம் தேதி மாலை 4 மணி வரை உள்ளது. இதனால் ஆடிப்பூர வழிபாட்டினை காலையில் செய்வது தான் சிறப்பானது.

திருமணம் ஆகாதவர்கள், தொடர்ந்து பல காலமாக திருமணம் தடைபட்டு இருப்பவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணமாகி கசப்பால் கணவன் - மனைவி பிரிந்திருப்பவர்கள், வேலை அல்லது தொழில் வாய்ப்பிற்காக தேடிக் கொண்டிருப்பவர்கள் தங்களின் விருப்பரங்கள் நிறைவேறுவதற்கு ஆடிப்பூர நாளில் அம்மனை வழிபடுவது சிறப்பானது. பூரம் என்றாலே பூரணத்துவம், முழுமை என்பது பொருள். அதனால் நம்முடைய வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அதை பூர்த்தி செய்து நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய அற்புதமான நாள் ஆடிப்பூரத் திருநாளாகும். இதை திருவாடிப்பூரம் என்றும் சிறப்பித்து சொல்வார்கள்.

ஆடிப்பூரத்தன்று அம்மன் கோவில்களில் நடக்கும் உற்சவங்களுக்கு வளையல் வாங்கிக் கொடுக்கலாம். வீட்டில் பூஜை செய்பவர்கள் அம்மனுக்கு வளையல் மாலை கட்டி அணிவிக்கலாம். ஒரு மனை பலகையில் அம்மனின் படத்தை வைத்து வழிபட வேண்டும். பிறகு அந்த பலகையில் திருமணம் நடக்க வேண்டும் என்கிறவர்கள், குழந்தை வரம் வேண்டுபவர்களை அமர வைத்து திருமணம் மற்றும் வளைகாப்பிற்கு செய்வதை போல் நழுங்கு வைத்து, கையில் வளையல் மாட்டி, ஆசிர்வாதம் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் விரைவில் திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் அமையும்.

அம்மனுக்கு நைவேத்தியமாக பாயசம், சர்க்கரை பொங்கல் அல்லது ஏதாவது ஒரு இனிப்பு செய்து படைக்கலாம். வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் ஆகியவற்றை தானமாகக் கொடுக்கலாம். இதனால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறி, அளவில்லாத நலன்கள் கிடைக்கும்.