பிறந்தது புனித ஆடி...  ஆடி மாதம்,  அம்மன் மாதம் ஆன கதை இது தான்!

Aadmika
Jul 17, 2023,11:08 AM IST
 சென்னை : ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு உரிய மாதமாகவும், வேப்ப மரம் அம்பாள் குடியிருக்கும் மரமாகவும் ஆனதற்கு புராண கதை ஒன்று சொல்லப்படுகிறது. ஆடி பிறப்பு நாளான இன்று, அதை தெரிந்து கொண்டு அம்பிகையை வழிபட்டால் அம்மனின் அருளை பரிபூரணமாக பெற முடியும்.

ஒருமுறை பார்வதி தேவி, சிவ பெருமானின் பிரியாமல் இருக்கும் வரத்தை பெற வேண்டும் என்பதற்காக தவம் செய்வதற்கு பூலோகத்திற்கு சென்று விட்டாள். கைலையில் பார்வதி இல்லாத சமயத்தில் தேவலோக மங்கையான ஆடி என்ற பெண், யாருக்கும் தெரியாமல் பாம்பு உருவம் கொண்டு கைலாயத்திற்குள் நுழைந்தாள். பிறகு பார்வதி தேவியின் உருவம் கொண்டு, சிவனின் அருகில் சென்றாள். அவள் அருகில் வந்ததும் கசப்பு சுவையை சிவன் உணர்ந்தார்.



வந்திருப்பது பார்வதி இல்லை என தெரிந்து கொண்ட ஈசன், தனது திரிசூலத்தை எடுத்து ஆடியை நோக்கி ஓங்கினார். ஆனால் ஆடி தேவலோக பெண் என்பதாலும், சிவன் மீது தீராத பக்தி கொண்டவள் என்பதாலும் திரிசூலத்தில் இருந்து வெளிப்பட்ட ஒளியால் அவர் புனிதமானாள். ஆனால் கோபமடைந்த சிவன், நீ பூலோகத்தில் கசப்பான மரமாக பிறப்பாய் என சாபம் அளித்தார். ஆனால் ஆடியோ, பார்வதி தேவி உருவத்தில் உங்கள் அருகில் வந்தால் உங்களை வணங்கும் ஒரு நிமிடமாவது உங்களின் அன்பான பார்வை என் மீது படாதா என்ற ஏக்கத்தில் தான் இவ்வாறு தெரியாமல் செய்து விட்டேன். என்னை மன்னியுங்கள் சுவாமி என சிவனிடம் மன்றாடினாள்.

இருந்தாலும் என் தேவி இல்லாத சமயத்தில் அவளின் உருவத்தில் நீ வந்தது தவறு என சொன்ன சிவன், ஆடி தேவலோக மங்கை என்பதால் அவளின் பெயரில் ஒரு மாதம் ஏற்படும் ஏற்படும் என்றும், அந்த சமயத்தில் கசப்பான மரமான உன்னை மக்கள் வழிபடுவார்கள். அவர்களுக்கு பல நன்மைகளை வழங்கு என வரமளித்தார். கசப்பான என்னை எப்படி சுவாமி மக்கள் வணங்குவார்கள் என சந்தேகமாக கேட்ட ஆடியிடம், கவலைப்படாத உன்னுள் பார்வதி ஐக்கியமாவாள். அதனால் நீ அம்பிகையின் வடிவமாக வணங்கப்படுவாய் என்றார்.

சிவன் அளித்த சாபமே ஆடிக்கு வரமாக மாறியது. அதனால் தான் ஆடி மாதத்தில் அம்பிகையையும், வேப்ப மரத்தையும் மக்கள் வழிபடுகிறார்கள். அதோடு ஆடி மாதத்தில் தான் தவமிருந்த அம்பிகைக்கு சிவ பெருமான் காட்சி கொடுத்து, தன்னை எப்போதும் பிரியாமல் இருக்கும் வரத்தை அருளினார். இந்த நாளே ஆடித்தபசு விழாவாக கொண்டாடப்படுகிறது. சங்கரன் கோவிலில் ஆடி தபசு விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.