ஆடிக் கிருத்திகை 2024 : முருகனுக்கு எந்த நாளில், எப்படி விரதம் இருக்க வேண்டும் ?

Aadmika
Jul 29, 2024,09:04 AM IST

சென்னை : தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்குரிய நட்சத்திரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கார்த்திகை நட்சத்திரம். சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றி ஆறு குழந்தைகளையும், கார்த்திகை பெண்கள் ஆறு பேரும் சிறப்பாக வளர்த்தெடுத்தனர். அவர்களை சிறப்பிக்கும் விதமாக, கார்த்திகை பெண்கள் ஆறு பேரையும் நட்சத்திரங்களாக இருக்கும் வரத்தை அளித்தார் சிவ பெருமான். அதோடு, எவர் ஒருவர் கார்த்திகை பெண்களை நினைத்து விரதம் இருந்து வழிபடுகிறார்களோ அவர்களுக்கு அனைத்து நலன்களையும் கந்தன் அருள்வான் எனவும் வரும் அளித்தார். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதனால் முருகப் பெருமானுக்கு, கார்த்திகேயன் என்ற திருநாமம் ஏற்பட்டது.


ஆடிக்கிருத்திகை :




மற்ற மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தை விட தை, ஆடி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரம் மிகவம் சிறப்புக்குரியதாகும். அம்பிகைக்குரிய ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருப்பவர்களுக்கு முருகப் பெருமான் வேண்டிய வரங்களைக் கொடுப்பார் என்பத நம்பிக்கை. பதவி உயர்வு, தலைமை பண்பு, குழந்தை, திருமணம், வாழ்வில் இருக்கும் பிரச்சனைகள் தீர என எந்த கோரிக்கையாக இருந்தாலும் அதை முன் வைத்து விரதம் இருந்தால், அதை முருகப் பெருமான் நிச்சயம் அருள்வார்.


எந்த நாளில் விரதம் இருக்க வேண்டும் ?


இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடிக் கிருத்திகை திருநாள் இந்த ஆண்டு இரண்டு நாட்கள் அமைந்துள்ளது. அதாவது, ஜூலை 29ம் தேதி பகல் 02.41 மணிக்கு துவங்கி, ஜூலை 30ம் தேதி பகல் 01.40 வரை கிருத்திகை நட்சத்திரம் உள்ளது. இதனால் எந்த நாளை ஆடிக்கிருத்திகையாக எடுத்துக் கொண்டு, எந்த நாளில் விரதம் இருக்க வேண்டும் என பக்தர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களும் கிருத்திகை நட்சத்திரம் உள்ளதால் இரண்டு நாட்களும் விரதம் இருக்கலாம்.


கிருத்திகை விரதம் இருக்கும் முறை :




பொதுவாக கிருத்திகை விரதம் என்பது பரணியில் துவங்கி, கிருத்திகையில் நிறைவு செய்ய வேண்டிய விரதமாகும். அப்படி பரணியுடன் சேர்த்தே விரதம் இருப்பவர்கள் ஜூலை 29ம் தேதி காலை ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிடாமல், பகல் மற்றும் இரவு நேரத்தில் எளிமையான உணவுகளை எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். மறுநாள் ஜூலை 30ம் தேதி காலை, பகல் இரண்டு வேளையும் உபவாசமாக இருந்து, மாலையில் விளக்கேற்றி வழிபட்ட பிறகு விரதத்தை நிறைவு செய்யலாம். அப்படி முடியாதவர்கள் ஜூலை 30ம் தேதி முருகனுக்குரிய செவ்வாய் கிழமையில் காலை ஒரு வேளை மட்டும் விரதமாக இருந்து, பகலில் இலை போட்டு, கார்த்திகை நட்சத்திரம் முடிவதற்கு முன்பாக விரதத்தை நிறைவு செய்யலாம்.


எப்படி வழிபட வேண்டும் ?


முருகனுக்கு பால், பழம், தேன் கலந்த திணை மாவு, பஞ்சாமிர்தம் போன்ற எது முடியுமோ அதை நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். வீட்டில் சட்கோண கோலம் வரைந்து, 6 அகல்களில் நெய் விட்டு, தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.


ஆடி கிருத்திகை அன்று வேல்மாறல், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் வகுப்பு, வேல் விருத்தம், திருப்புகழ் போன்ற முருகப் பெருமானுக்குரிய பாடல்களை பாடி, மனமுருக முருகப் பெருமானிடம் வேண்டினால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.