HBD BharathiRaja தமிழ்த் திரையுலகின் " இமயம்" பாரதிராஜா.. சிறப்பு பார்வை!

Su.tha Arivalagan
Jul 17, 2023,03:51 PM IST
- சகாயதேவி

சென்னை: தமிழ்த் திரைப்பட வரலாற்றில் எத்தனையோ இயக்குனர்கள் வலம் வந்திருக்கலாம். அவர்களில் அதிசயமாய் பூத்த குறிஞ்சிப் பூ தான் நம்ம இயக்குனர் பாரதிராஜா .

திரைப்படம், திரைப்பாடல்கள் என்றாலே எல்லோரும் பல வெளிநாடுகளுக்கு சென்று, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, துபாய் என பல நாடுகளுக்குப் படையெடுத்து அங்குள்ள அடுக்கு மாடிகளைக் காட்டியும், உள்ளூரில் அதுபோல செட் போட்டும் ஜிம்மிக்ஸ் பண்ணிக் கொண்டிருந்தது ஒரு காலம்.

ஆனால் நம்ம ஊரு கிராமங்கள் எந்த நாட்டின் அழகிற்கும் இழைத்ததில்லை என்று வெளிச்சம் போட்டுக் காட்டியவர் இந்த மனிதர்தான். நம்ம ஊரு கருவேலங்காட்டு அழகை கூட அற்புதமான படங்கள் மூலம் காட்டியவர் பாரதிராஜா.



பாரதிராஜா தேனி-அல்லிநகரம் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை வெளிப்புறங்களுக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த கிராமத்துக் கதைகளை படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, போன்ற பல கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர்.

திரைப்படத் தயாரிப்பாளர் புட்டண்ணாவின் உதவியாளராக பாரதிராஜா தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது முதற்படமான 16 வயதினிலே திரைப்படத்தில் திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார்.  பதினாறு வயதினிலே இப்போதும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.  இவர் இயக்கிய அடுத்த திரைப்படம் கிழக்கே போகும் ரயில் முதற் திரைப்படம் போன்றே வெற்றியைத் தந்தது. 

இறுதியில் பாரதிராஜா கிராமப் பார்வையாளர்களுக்கு மட்டுமே திரைப்படம் எடுக்கும் திறன் கொண்டவர் என்ற விமர்சனங்களை எதிர்  கொண்டுவந்தார். தப்பா நினைச்சுட்டீங்களை என்று சிட்டி சப்ஜெக்ட்டில் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தை உருவாக்கி அத்தனை பேரையும் அசரடித்தார் பாரதிராஜா. ஒரு மனநோயாளியான பெண் வெறுப்பாளரைப் பற்றிய இத்திரைப்படம் கருத்தாக்கம் மற்றும் உற்பத்தி என முற்றிலுமாக மேற்கத்திய பாணியில் உருவாக்கப்பட்டது.  

நிழல்கள் (1980) மற்றும் அதிரடியான பரபரப்பூட்டும் டிக் டிக் டிக் போன்ற சஸ்பென்ஸ் படங்களையும் எடுத்து தான் ஒரு சகலகலா இயக்குநர் என்பதை நிரூபித்தார். 

வேதம் புதிதில் பாரதிராஜா காட்டிய பாலு தேவர் இன்னும் நம் மனதில் பசுமையாக நினைவிருப்பார். முதல் மரியாதை  திரைப்படத்தில் இளம் வயது ராதாவுக்கும், வயது முதிர்ந்த சிவாஜி கணேசனுக்கும் ஏற்படும் அன்பை நேசத்தை ஒரு கவிதையாகவே காட்டி மயிலிறகு போல அந்த பாசத்தை காட்டிய விதம் அனைவரையும் சிலாகிக்க வைத்தது. 

பெண் சிசு கொலையின் விபரீதத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய கருத்தம்மா, தெற்கத்தி அண்ணன்  தங்கை ��ாசத்தை உரக்க சொன்ன கிழக்கு சீமையிலே, என அவர் செதுக்கிய கதாப்பாத்திரங்கள் எதனை . கதைகள் எத்த்தனை.. எத்தனை.அத்தனையும் சிற்பி செதுக்கிய சிலை போன்றது என அடித்து சொல்லலாம் .

தேசிய விருதுகள்:

இந்த காலத்தில் தேசிய விருது வாங்குவது என்பது பல கலைஞர்களின் கனவாக இருக்கிறது. ஒரு தேசிய விருது வாங்குவது மலைப்பாக இருக்கும் வேளையில் இவர் வாங்கின தேசிய விருதுகளை பெரிய லிஸ்ட்டே போடலாம். 

1982 - சிறந்த தெலுங்கு திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது - சீதாகொகா சிலுகா (இயக்குனர்)
1986 - தேசிய சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருது - முதல் மரியாதை (தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்)
1988 - பிற சமூக பிரச்சினைகள் குறித்த சிறந்த படத்திற்கான தேசிய திரைப்பட விருது - வேதம் புதிது (இயக்குனர்)
1995 - கருத்தம்மாவுக்கு (இயக்குனர்) குடும்ப நலன் குறித்த சிறந்த படத்திற்கான தேசிய விருது
1996 - சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது - அந்திமந்தாமரை (இயக்குனர்)
2001 - தேசிய சிறந்த திரைக்கதைக்கான விருது- கடல் பூக்கள் (இயக்குனர் & எழுத்து)

இரண்டு கைகள் விரித்து ஆரம்பிக்கும் இவரின் திரைப்படம் நம்ம ஊரின் அழகை மட்டுமா காட்டியது . அந்தந்த ஊரின் மண்வாசனை, அந்த ஊர் மனிதர்களின் பழக்க வழக்கங்கள், அந்த ஊர் பாஷை என ஒவ்வொன்றையும் காட்டி நம்மை அந்த கிராமத்து  வயக்காட்டுக்கு கூட்டிச்சென்று நம்மை வயல்வெளியில் ஓடவிட்டு அந்த கிராமத்து வீட்டு திண்ணைக்கு அழைத்து சென்று விடும். எத்தனை இயல்பான படங்கள் எத்தனை இயல்பான கதைகள் எதனை இயல்பான வசனங்கள் அத்தனையும் காவியங்கள்.

திரைப்பட இயக்குனர் மட்டும் அல்லாமல் பல படங்களில் தான் சிறந்த நடிகர் என்பதையும் நிரூபித்திருக்கிறார் நம்ம பாரதிராஜா. இப்பவும் நடித்துக் கொண்டிருக்கிறார் பாரதிராஜா. தனுஷுடன் இணைந்து திருச்சிற்றம்பலத்தில் ஒரு கலக்கு கலக்கி இருந்தாரே. மறக்க முடியுமா! 

உடம்புக்குத்தாய்யா வயசெல்லாம்.. என்னோட மனசுக்கு இல்லை.. என்று இப்பவும் சொல்லாமல் சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறார் இந்த கிராமத்து நாயகன்.

ஹேப்பி பர்த் டே சார்!