"தமிழ்நாடு"..  ஒத்தக் கோலம்.. மொத்த தமிழ் கூறும் நல்லுலகும் பத்திக்கிச்சே!

Su.tha Arivalagan
Jan 14, 2023,09:33 AM IST
சென்னை: தமிழ்நாடு என்ற பெயரை கோலத்தில் வரைந்து சென்னையைச் சேர்ந்த பெண் அசத்தியுள்ளார். இந்தக் கோலம் தற்போது பட்டி தொட்டியெங்கும் வைரலாகி விட்டது.



ஆளுநர் ஆர். என். ரவி தமிழ்நாடு என்ற சர்ச்சையைக் கிளப்பினாலும் கிளப்பினார், இன்று வரை விடாமல் அது தொடர்ந்து கொண்டுள்ளது. கிடைக்கிற கேப்பில் எல்லாம் தமிழ்நாடு என்ற வார்த்தையை விதம் விதமாக பிரபலமாக்கி கொண்டுள்ளனர் பலரும்.

அந்த வகையில் திமுக எம்.பி. கனிமொழி தனது புத்தாண்டு, பொங்கல் வாழ்த்தை வித்தியாசமான முறையில் வெளியிட்டிருந்தா். அதாவது தமிழ்நாடு என்ற பெயரை வைத்து கோலமே போட்டிருந்தார் தனது வாழ்த்தில். இது பார்க்க வித்தியாசமாகவும்,அடடே சூப்பரப்பு என்று சொல்லும் வகையிலும் அமைந்திருந்தது.

இந்தக் கோலம் வெகு வேகமாக பிரபலமானது, வைரலானது. யார் இந்தக் கோலம் போட்டது எப்படிப் போட்டார்கள், கம்ப்யூட்டரில் வரைந்தார்களா, எத்தனை புள்ளி எத்தனை வரிசை என்று அடுக்கடுக்காக கேள்விகள் கிளம்பின. அதற்கு கனிமொழியே தற்போது விடை அளித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த டிசைனர் வர்ஷா என்பவர்தான் இந்தக் கோலத்தை வரைந்துள்ளார். இவர் கனிமொழியின் மகனுடைய நண்பர் என்று கனிமொழியே தெரிவித்துள்ளார். அவருக்கு  நன்றியும் அவர் தெரிவித்துள்ளார்.

டிசைனர் வர்ஷா, விதம் விதமான எழுத்துக்களில் டிசைன் போடுவதில் வல்லவராக இருக்கிறார். அவரது இன்ஸ்டாகிராம் முழுக்க வித்தியாசமான கோலங்கள், அலங்கரிக்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது இந்த தமிழ்நாடு கோலம்.