"புகழுக்குக் களங்கம்".. ரூ. 10 கோடி தர வேண்டும்.. ஏ.ஆர். ரஹ்மான் வக்கீல் நோட்டீஸ்!

Su.tha Arivalagan
Oct 03, 2023,08:55 PM IST

சென்னை: இசை நிகழ்ச்சி நடத்துவதாக ஒப்புக் கொண்டு முன்பணம் பெற்றுக் கொண்டு அதை நடத்தாமல் முன்பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று தனக்கு எதிராக புகார் கூறியுள்ளவரிடம், ரூ. 10 கோடி மான நஷ்ட இழப்பு கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.


இந்திய அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் சங்கத்தின் 78வது தேசிய மாநாட்டையொட்டி ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அதற்காக அவருக்கு அட்வான்ஸ் தரப்பட்டதாகவும், அந்த நிகழ்ச்சி நடைபெறாதால் வாங்கிய அட்வான்ஸ் தொகை ரூ. 29.50 லட்சத்தை ஏ. ஆர்.ரஹ்மான் திருப்பித் தரவில்லை என்று கூறி அந்த சங்கம் சார்பில் புகார் தரப்பட்டுள்ளது.




இந்தப் புகாருக்கு தற்போது வக்கீல் நோட்டீஸ் மூலம் பதிலளித்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். இதுதொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கறிஞர் நர்மதா சம்பத் விடுத்துள்ள வக்கீல் நோட்டீஸில், எனது கட்சிக்காரர் இந்தப் புகார்களை முற்றாக நிராகரிக்கிறார். இது தவறான புகார். 


எனது கட்சிக்காரர் எந்த வகையிலும் இசை நிகழ்ச்சி தொடர்பாக எந்த ஒப்பந்தமும் போடவில்லை, கையெழுத்தும் இடவில்லை. மேலும் எனது கட்சிக்காரருக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படும் அட்வான்ஸ் தொகை அவருக்கு தரப்படவில்லை. மாறாக வேறு யாருக்கோ கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கும் எனது கட்சிக்காரருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 




வேறு யாரோ 3வது நபருக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் எனது கட்சிக்காரரை சம்பந்தப்படுத்துவது வினோதமாக உள்ளது. பணமே வாங்காத நிலையில் அதைத் திருப்பித் தருவதும், பகிரங்க மன்னிப்பு கோருவதற்கும் இடமே இல்லை.  மீடியா கவனத்தை ஈர்ப்பதற்காகவும், மலிவான விளம்பரம் தேடும் நோக்கிலும் இந்தப் புகார் கூறப்பட்டுள்ளது.


இந்தப் புகாரானது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் புகழுங்குக் களங்கம் கற்பிக்கும் வகையில் உள்ளது. எனவே இந்த நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற 15 நாட்களுக்குள் ரூ. 10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மேலும் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.