Poem.. நிலவினையும் சூரியனையும் மறைத்துவிட்டு.. நித்தம் ஒரு முறை என்னை சந்திப்பாய்!

Su.tha Arivalagan
Feb 19, 2025,12:34 PM IST

- தேவி


மழை  மேகங்களை உரசிக்கொண்டு 

மௌனத்தின் ஜாடையாக 

வெளிவரும் நீ

காதல் வார்த்தையாக என் மீது துளிர்த்து 

என்னை பூக்க வைக்கின்றாய்....

உன்னை தீண்டும் நொடியில் 

என்னை மறந்து 

மரணித்து  போகின்றேன்... 

உன் விழிகளை கண்ட நொடியில்

என் இதழ்கள் 

உன்னில் மயங்க தொடங்குகின்றது...

மேகத்தின் தென்றலாக வரும் உன்னை 




இதயத்தின் ஓரங்கள் பருகத் தொடங்குகின்றது....

நிலவினையும் சூரியனையும் மறைத்துவிட்டு

நித்தம் ஒரு முறை என்னை சந்திப்பாய் என்று 

கருவிழிகள் உன்னை மௌனமாக கேட்கின்றது.... 

குளிரிலும் உன்னை தேடுகின்றேன்

கோடையிலும் உனக்காக ஏங்குகின்றேன் 

மனத்திற்குள் சண்டை போட்டு கொண்டு 

மற்றவர்களுக்காக ஊமையாக நடிக்கின்றேன்.... 

மனதின் எண்ணங்களை 

உன்னிடம் மட்டுமே சொல்ல விரும்புகின்றேன்

வார்த்தைகள் இல்லாமல்... 

உன்னைக் காணும் போதெல்லாம் 

புதிய புதிய மாற்றங்களை எண்ணில் கண்டு 

உன்னை என் காதலியாக நினைக்கின்றேன்...

நானும் மரங்களும் ஒன்றே 

உன்னை கண்ட நொடியில் பூத்து சிரித்து 

பனி மலையாக உறைந்து உருகி போகின்றேன்

உன் வருகையினால் மனதுக்குள் வெப்பத்தையும் 

பார்வையில் குளிர்ச்சியையும் உணர்ந்து 

தித்திக்கும் தேனாகின்றேன் 

என் இதழ்களில் உன் மொழியினை உணர்ந்து 

மனதுக்குள் புதைந்திருக்கும் மௌன காதலை 

பார்வையில் வீசுகின்றேன் 

உன்னை தொடும் நொடியில் 

என் விரல் இடையில் 

துளி தீ 

என்னை இசைத்து  எரிக்கின்றது

எங்கிருந்து வருகின்றாய்.... 

உன்னை தொடும் நொடியில் என்னை உனதாக்கி 

எனது பார்வையை உனது வசமாக்கி 

என் மனதில் நீ பூத்துக் குலுங்குகின்றாய்

உன்னில் மயங்கி  

ரசித்து ரசித்து சலிப்பு இல்லாமல் 

சிலிர்த்து போகின்றேன்!