காந்தி வழியில்.. ஏற்றத்தாழ்வு மறந்து.. ஒற்றுமை உணர்வுடன்.. வாழ்ந்திடுவோம்!

Su.tha Arivalagan
Oct 02, 2023,11:25 AM IST

அகிம்சை வழியில் அறப்போர் புரிந்து

வெற்றி கண்ட தியாகத்தின் திருவுருவே!

விடுதலையை ஈன்று

இந்திய மண்ணைக் காத்த மண்ணுலக மாமேதையாம்

மகாத்மா காந்தியே!

நீங்கள்

குழப்பமும் மயக்கமும்

கொண்ட

இளமைப்பருவம்

தாண்ட

சிராவணன் கதையைக் கேட்டு




பெற்றோர் பக்தி கொண்டு

அரிச்சந்திரன் நாடகம்

பார்த்து

உண்மையெனும்

விரதம் பூண்டு

சத்திய சோதனை தாண்டி

சுயமதை காத்து நின்று

வாழ்க்கைப் பாதை தன்னில்

வழுக்கிய புள்ளியைக் கூட

வெளிச்சம் போட்டு காட்டி

கொள்கை வீரம் நாட்டி

சரித்திரப் பாடத்தோடு

சத்திய பாடம் தந்தீர்!

உங்கள் பிறந்த நாளில்

அகிம்சை போற்றி

சைவம் உண்டு

மதுவை விலக்கி

மௌன விரதம் பூண்டு

அந்நிய மோகம் தவிர்த்து

கதராடை உடுத்தி

சாதிமதம் துறந்து

ஏற்றத்தாழ்வு மறந்து

உண்மை பேசி

ஒற்றுமை உணர்வுடன்

பயம்தனை ஒழித்து

நட்புடன் கூடிய

நிரந்தர வெற்றியில் திளைத்திட 

உறுதி பூணுவோம்!


கவிதை: 


வி. ராஜேஸ்வரி

உதவியாளர், காலேஜ் அலுவலகம்

மதுரைக் கல்லூரி, மதுரை.