வானத்திலிருந்து வீழும் முத்தங்கள்.. மனதுக்குள் பெய்யும்.. காதல் மழை!

Su.tha Arivalagan
Feb 26, 2025,02:57 PM IST

- தேவி


மழை மேகங்களை சிலிர்க்க வைத்து

காற்றினை உறையை வைத்து 

மலைகளை உருக வைத்து 

வானத்திலிருந்து முத்தங்களாக வெளி வருகின்றாய்!


மலரினை ரசிக்க வைத்து 

முத்துக்களாய் பிறப்பு எடுத்து 

இயற்கையாய்  யுத்தம் செய்து

மனதினுள் காதல் மழையை

பொழிய வைக்கின்றாய்!




இமைகளில் தவழ்ந்து 

இதயத்தை இசையாக்கி 

காதலர்களின் கவிதையாக திகழ்ந்து 

உன்னில் நினைந்தவரை 

தன்னில் பூக்க வைக்கின்றாய்.....


மௌனங்களாக வந்து 

புது பாஷையினை காதலிக்க வைத்து

குயிலினை கூவச் சொல்லி

மயிலினை ஆட வைத்து 

மனதினுள்  புதிய ராகத்தை 

பாட வைக்கின்றாய்!


பார்வையின் தேடலாக 

மனதினை உறைய வைத்து

உன்னைத் தீண்டும் நொடியில் 

மேகத்தினுள் புதைய வைத்து 

பார்வைகளை பாஷையாக்கி

இமைகளை வீணையாக்குகின்றாய்!

 

மௌனங்களே ஓசையாகி 

தென்றலாக மலர்ந்து உதிர்ந்து 

உன் வசம் அடைந்து 

நொடியில் சுவாசிக்க மறந்து 

உன்னை நேசித்து 

பூத்துயிர்  பெற வைக்கின்றாய்!


வானத்தின் மடியில் பிறந்து 

மேகங்களை இதழ்களால்  தள்ளிக் கொண்டு 

வானவில்லின் காதலை கண்களில் தூவிக்கொண்டு 

இதயத்தை நொடிப் பொழுதில்  திருடுகின்றாய்!


வாழ்க மழையே.. வீழ்க தினமே!