காமராஜர்.. முதல்வர் மகாத்மா.. இப்போது  "திருக்குறள்".. திரைப்படமாகும் அற நூல்!

Su.tha Arivalagan
Nov 28, 2023,11:12 AM IST

- மஞ்சுளா தேவி


சென்னை : இமாலய கருத்துக்களை ஈரடியில் சொல்லி விடும் உலகின் மிகச்சிறந்த அற நூலான திருக்குறளை இயக்குனர் ஏ.ஜே பாலகிருஷ்ணன் திரைப்படமாக இயக்குகிறார்.


ரமணா கம்யூனிகேஷன் நிறுவனம் சார்பாக திருக்குறள் அற நூலை திரைப்படமாக தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே கர்மவீரர் காமராஜர் வாழ்க்கையை, காமராஜ் என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்துள்ளது. இதற்காக தமிழக அரசின் சிறப்பு விருந்தினையும் பெற்றுள்ளது. அப்படம் காமராஜ் வரலாற்றுக்கான ஆவணமாக திகழ்கிறது.


இந்நிலையில் திருக்குறள் படத்தை ஏ.ஜே பாலகிருஷ்ணன் இயக்க, செம்பூர் கே. ஜெயராஜ் திரைக்கதை எழுதியுள்ளார். இத்திரைப்படத்தை அனைத்து மொழிகளிலும் உலகமெங்கும் திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். பொங்கல் தினமான தைத்திங்கள் திருவள்ளுவர் தினத்தன்று இத்திரைப்படத்திற்கான துவக்க விழா நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.




திருக்குறளைத் தெரியாத தமிழர்களே இருக்க முடியாது.. இப்போது இது தமிழையும் தாண்டி பல மொழி பேசவோருக்கும் பிடித்தமான நூலாகவும் மாறியுள்ளது. காரணம் அதில் உள்ள சிறப்புகள்.. 


திருக்குறள் பண்டைய இலக்கிய நூலாகும். இது குறள் வெண்பா என்னும் பாவடிகளாலான ஈரடி செய்யுள்களைக் கொண்டது. திருக்குறள் அறம், பொருள், இன்பம் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பகுதிக்கும் 330 அதிகாரம் உண்டு. ஒவ்வொரு அதிகாரத்திற்கும் பத்து குறள்கள் வீதம் மொத்தம் 1330 குறள்கள் உள்ளது. இந்த குறள்கள் ஒவ்வொன்றும் தனிமனிதனின் இல்லாமை, அறியாமை, கூடா நட்பு, கல்லாமை, இன்பம், ஒழுக்கம், நீதிநெறி, கடமை, நன்றி உணர்வு, நீதி தவறாமை போன்றவற்றை பறைசாற்றுகிறது. 


திருக்குறளை பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, உலகப் பொதுமறை, முப்பால் , உத்வேகம், என பல பெயர்கள் வழங்கி சிறப்பித்து கூறுகின்றனர். தேசத்தந்தை மகாத்மா காந்தி அடிகளும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரும், இன்று உலக அரங்கில் அறிஞர்கள் மத்தியில் இந்தியாவின் முகங்களாக அறியப்படுகின்றனர்.


இப்படி சிறப்புகள் மிகுந்த திருக்குறளை  வைத்து யாரும் இதுவரை திரைப்படம் எடுத்ததில்லை. திரைப்படங்களில் திருக்குறள் இடம் பெற்றிருக்கிறது.. ஆனால் குறளே படமாவது இதுதான் முதல் முறை. இதனால் இதை எப்படி எடுக்கப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து படக்குழுவினர் கூறுகையில், திருக்குறளின் உயிர்ப்பை மூன்று மணி நேர திரைப்படத்திற்குள் அடக்குவது அத்தனை எளிதல்ல என்பது திரைக்கதை எழுதும் போது உணர முடிந்தது. அறத்தினை வலியுறுத்த தோன்றிய நீதி நெறி நூல் என்றாலும் குறள் வெறுமனே பிரச்சார இலக்கியம் அல்ல. கவித்துவமும், அழகியலும் மிக்க அற்புத படைப்பு. திரைமொழியிலும் இதை பிரதிபலிக்க முயற்சித்துள்ளோம்.


திருவள்ளுவரோடு 2000 வருடங்களுக்கு முந்தைய தமிழ்நாட்டினையும் இத்திரைப்படத்தில் பதிவு செய்து உள்ளோம். வேணாடு, பூழி நாடு, மூவரச நாடு, பன்றிநாடு, அருவா நாடு, வள்ளுவ நாடு என பல்வேறு சிற்றரசுகள் குறித்தும் தமிழ் அறிஞர்களிடையே நிகழ்ந்த வீரம் செறிந்த போர்க் களகாட்சிகளும்  திரைப்படத்தில் இடம்பெறுகின்றன. அன்றைய தமிழர்களின் பயன்பாட்டு, தொழில், வணிகம் ,என வாழ்வியல் குறித்தும் இத்திரைப்படம் பேசவிருக்கிறது என திருக்குறள் படக்குழுவினர் கூறியுள்ளனர்.