வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை: வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று கணித்திருந்த நிலையில், தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று அறிவித்துள்ளது .
தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஏற்கனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது. இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. தற்போது வெக்கை தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது. ஆனால் டெல்லி உள்ளிட்ட வட மாநில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. அத்துடன் வெப்ப அலையும் கடுமையாக இருக்கிறது. மேலும் வரும் நாட்களில் வெயிலுடன் வெப்ப அலை இன்னும் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதே போல் தமிழ்நாட்டில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக அறிவித்திருந்தது.
அதன்படி தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்க கடல் பகுதிகளை அடையும்.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கணித்துள்ளது.