இமைகளின் இசையில் இளைப்பாறி.. இதழ்களின் இடையில் .. உதயமாகிறேன் (கவிதை)
- தேவி
மேகங்களின் கூந்தலுக்கு இடையில்
அவளது கைகளை இறுக்க பிடித்துக் கொண்டு
வானில் நட்சத்திரமாக
உலா வரும் கனவுகளுக்காக
கண்கள் தவம் இருக்கின்றது...
இமைகளின் இசையில்
இளைப்பாறி
இதழ்களின் இடையில்
உதயமாக போகின்றேன்....
பூக்களின் வண்ணத்தில் தவழ்ந்து
அவளது வாசனையில் பூக்களை கலைத்துவிட்டு
பார்வையின் கொஞ்சலுக்காக
ஏங்கும் கனவுகளை வேண்டி
இதயத்தின் துடிப்புகளும் யுத்தம் செய்கின்றது
நிலவின் ஒளியில்
பூத்துக் குலுங்கும்
பறவைகளின் அழகினை மறைக்கும்
கடலின் ஆழத்தை போன்ற
அவளது தேடல்களின் ஓசையை
கனவிலும் விழித்துக் கொண்டு
ருசிக்கின்றது தித்திக்கும் கருவிழிகள்.,...
வானத்தின் எல்லையை மிஞ்சும்
அவளது கனவு கோட்டைகளின்
தேன் அமுதமாக மினுமினுக்கும்
பட்டாம்பூச்சிகளின் இறகுகளாக பிறப்பெடுத்து
மீண்டும் மீண்டும்
தொலைந்து போகின்றேன் கனவினில்....
பவளத்தின் வெண்மையாக சிந்தும்
அவளது சிரிப்பின் முத்துக்களை
பருகச் சொல்லி தூது வரும்
மழை துளிகளில்
குதூகளிக்கும் கனவின் அலப்பறைகள்....
குயில்களின் இன்னிசையை தோற்கடிக்கும்
அவளது மெல்லிசையை வருடும் காற்றும்
கொஞ்சிக் கொஞ்சி நகர மறுத்ததைக் கண்டு
துடிதுடித்தேன் சொப்பனத்திலும்.....
வானவில்லின் வண்ணங்களை
வார்த்தைகளின் எல்லைகளாக
வைத்துக் கொண்டு
மயில் தோகையின் நடனத்தினை
பார்வையில் ஒளியாக புகுத்திக் கொண்டு
என்னை பிடித்து
ஒளித்து வைத்துக் கொண்டாள்
அவளது இடைமடியில்..,..
மரத்தின் வேர் பகுதியை
மண் மறைப்பது போல
என் மனதின் காதலை
உன் மௌனம் மறைக்கின்றது
கனவிலும் உன் பார்வையின்
வார்த்தையை தேடி தொலைகின்றேன் ....
என் மனதின்
கனவு பூந்தோட்டத்தில்
உன் கையில் பிறந்து
பூத்துக் களைத்து
இறந்து போகின்றேன்
அடுத்த பிறவியிலும்
உன் கையை தொடும் மலராக
உதிக்க விரும்புகின்றேன்....
குழந்தையின் பாவனையை கொண்டு
குமரியின் அழகினை தின்று
மனதினை மௌனமாக கவர்ந்து
பார்வையால் இதயத்தை உடைத்து
வார்த்தையால் உயிரினை மீட்டு
உறவின் அடையாளத்தை ஓரப்பார்வையில் ஒளித்து
கனவிலும் நினைவிலும்
உன்னை மறக்க நினைத்து
துடித்து துவண்டு கொண்டே
நகர்கிறது என் நிமிடங்கள்....!