நலம்.. நலம் காண ஆவல்!

Su.tha Arivalagan
Jan 09, 2024,05:57 PM IST

சொல்லுங்களேன் சொல்லுங்களேன் 

இறைவனின் கடிதத்தில் மானிடச் செல்வங்களே 

நலம் நலம் அறிய ஆவல் 

தாயையும் தந்தையையும் உருவாக்கி 

பேரன்பு கொண்ட சுற்றத்தையும் சொந்தமாக்கி 

மனித நேயத்தை மாண்புற வளர்த்து 

மதிப்பு மிக்க சமுதாயத்தில் 

ஓங்கிய மலையும் ஓடிவரும் அருவியும்

பாதுகாக்கும் பெருங்கடலும்

பச்சை பசுமையாய் கானகமும் காடும் கரையும் 

வீசுகின்ற தென்றலில்

வாசமிகு மலர்களின் வணப்பும்

உன் கையில் ஒப்படைத்துச் சென்றேனே 

அதன் நலம் நலம் அறிய ஆவல் 

ஆனால் செவியுற்றதெல்லாம் கேட்டபோது 

ஆதங்கத்தின் வெளிப்பாடு இக்கடிதம் 

மனிதநேயம் மறந்து போனதாம்

அன்புமிக்க மழலைகளை அரவணைக்க கரங்கள் இல்லையாம்

தோள் தாங்கிய தந்தையும்

வன்கொடுமை கொடூரன் ஆனானாம் 

சுயநல தேவைக்கு பலிகடா ஆக்கினாளாம் 

பத்து மாதம் சுமந்து எடுத்த தாய் 

கலாச்சாரம் பண்பாடும் 

பாகுபாடுகளும் பிரிவுகளும் பல பல 

ஒன்று பட்ட சகோதரர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் 

வேற்றுமை எனும் அரக்கன் தொற்றாய் இடையில் வந்து விட்டான் என்று!




நல்லோர்களை உருவாக்கிய

நற்காவியங்கள் நான் தந்து

நன்றும் தீதும் கற்று தந்ததெல்லாம் 

வீழ்ந்து போனதேன்?

மனிதம் வீழ்ந்து

மானுட அழிவும்

இயற்கை அழிவும் 

உங்களைத் தாக்க..

படைத்தவனின் மனம் வேதனை கொள்கிறதே

எனதருமை மானிடா 

எப்பொழுது எனக்கு எழுதப் போகிறாய்?

"மனிதநேயம் மலர்ந்து விட்டது

மானுடத்தில் பேதமில்லை 

வக்கிரம் எல்லாம் ஒழிந்து 

வண்ண வண்ண சமுதாயம் வளர்ந்து வருகிறது

உங்கள் நலம் நலம் அறிய ஆவல் 

வாருங்கள் எம் புவியை காண" என்று!


கவிதை: 


இ.அங்கயற்கண்ணி (M.sc, M.A, B.Ed)

முன்னாள் ஆசிரியர்

நெய்வேலி