இஸ்ரேலில்.. ஹெஸ்புல்லா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி.. இந்தியர் பலி.. 2 பேர் காயம்!

Su.tha Arivalagan
Mar 05, 2024,08:49 AM IST

ஜெருசலேம்: லெப்னான் நாட்டிலிருந்து நடத்ததப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். வடக்கு இஸ்ரேலின் எல்லைப் பகுதியில் உள்ள மார்கலியோட் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.


பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ஏவப்பட்டதில் மார்கலியோட்டில் உள்ள ஒரு தோட்டம் தாக்குதலுக்குள்ளானது. அந்த தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இந்தியர் இதில் சிக்கி பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். அவர்களும் இந்தியர்கள்தான். 3 பேருமே கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.


கொல்லப்பட்ட நபரின் பெயர் பாட்னிபின் மேக்ஸ்வெல். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் இவர். இவரது உடல் தற்போது ஜீவ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களின் பெயர்கள் ஜோசப் ஜார்ஜ், பால் மெல்வின் என்று தெரிய வந்துள்ளது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.




ஜார்ஜ் முகத்திலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளனர். அவர் குணமைடந்து வருகிறார்.  கேரளாவில் உள்ள தனது குடும்பத்தினருடனும் அவர் பேசியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெல்வினுக்கு லேசான காயம்தான் ஏற்பட்டுள்ளதால், அவர் பாதுகாப்பாக உள்ளார். இவர் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.


லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. ஹெஸ்புல்லா அமைப்பு தொடர்ந்து ராக்கெட் வீச்சு, ஏவுகணைத் தாக்குதல், டிரோன் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


காஸா முற்றுகையை எதிர்த்தும், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தும், இஸ்ரேலுக்குள் அவ்வப்போது ஹெஸ்புல்லா தாக்குதல் நடத்தி வருகிறது. ஹெஸ்புல்லாவின் தாக்குதலில் இதுவரை இஸ்ரேல் தரப்பில் 7 பொதுமக்களும், 10 இஸ்ரேல் ராணுவத்தினரும் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் பதில் தாக்குதலில் ஹெஸ்புல்லா தரப்பில் 229 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.