திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம்.. பக்திப் பரவசத்தில் பக்தர்கள்!
திருச்செந்தூர்: பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயில் மாசி திருவிழாவில், 10 வது நாளான இன்று தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றதுது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா என்ற முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தமிழ்நாட்டில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவில் மிகப் பிரசித்தி பெற்ற தலமாகும். கல்வியில் சிறந்து விளங்க வியாழ பகவானின் ஆட்சி பெற்ற இத்தல முருகனை பக்தர்கள் வழிபடுகின்றனர். இங்கு முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம், கார்த்திகை நட்சத்திரம் போன்ற நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதேபோல் ஆவணி மற்றும் மாசித் திருவிழாக்களும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
குறிப்பாக திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசி திருவிழா ஒவ்வொரு வருடமும் 12 நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் மாசி திருவிழா கடந்த மார்ச் மூன்றாம் தேதியில் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலை மாலை என சுவாமி முருகன் மற்றும் அம்பாள் தெய்வானை தனித்தனி வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில் முக்கிய விழாவான ஐந்தாம் நாள் குடை வாயில் தீபாரதனையும், ஆறாம் நாள் வெள்ளி தேரோட்டமும், ஏழாம் நாள் சிவப்பு சாத்தியும், எட்டாம் நாள் காலை வெள்ளை சாத்தியும், பச்சை சாத்தியும் நடைபெற்றது. இந்த மாசி திருவிழாவின் போது உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் ஏராளமான மக்கள் கந்தனின் திருப்புகழ் பாடி காவடி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி திருவிழாவில் பத்தாம் நாளான இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெறுகிறது. விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடமெழுத்து பிடித்தனர். இந்த தேரோட்டத்தில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர். பக்தர்கள் உணர்ச்சி வெள்ளத்தில் கந்தனுக்கு அரோகரா.. வள்ளி தெய்வானைக்கு அரோரா..என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பதினோராம் நாளான 13ஆம் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமியும் அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து பன்னெண்டாவது நாளுடன் விழா நிறைவடைகிறது.