மாரடைப்பு.. வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது.. சேரிலிருந்து சரிந்து விழுந்து இறந்த வங்கி அதிகாரி!

Meenakshi
Jun 27, 2024,03:04 PM IST

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த ராஜேஷ் ஷிண்டே என்ற ஊழியர், மாரடைப்பு ஏற்பட்டு இருக்கையிலிருந்து சரிந்து விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


ஹமிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான ராஜேஷ் ஷிண்டே. இவர் ஹெச்டிஎஃப்சி வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். வழக்கம் போல பணிக்கு வந்து வேலை செய்து கொண்டிருந்தார் ராஜேஷ். சக ஊழியர்களுடன் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீர் என மயங்கியுள்ளார். அமர்ந்திருந்த இருக்கையிலேயே மயங்கிச் சரிந்தார். முதலில் இதை அக்கம் பக்கத்தில் இருந்தோர் கவனிக்கவில்லை. சிறிது நேரம் அவர் துடிதுடித்தபடி இருந்த நிலையில் பிறகுதான் சக ஊழியர்கள் பார்த்தனர். விரைந்து வந்து அவரை தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்தனர். அதன்பின்னர் சிபிஆர் முதலுதவி செய்தும் பலனளிக்காததால், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.




மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார். இதனை கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வங்கியில் இருந்த கேமிராவில் என்ன நடந்தது என்பது குறித்து பார்த்துள்ளனர்.


அப்போது, சிசிடிவி காட்சிகளில் ஷிண்டேவின் சக பணியாளர்கள் அவரது முகத்தில் தண்ணீர் தெளிப்பதையும், சிபிஆர் கொடுப்பதையும் காண்பித்துள்ளது. அதன்பின்னர் சக ஊழியர்களிடம் விசாரித்த போது, ஆரம்ப சிகிச்சைக்கு அவர் பதிலளிக்காததால், அவர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், மருத்துவமனைக்கு போகும் போதே வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறியுள்ளனர்.