ஜோமாட்டோவை ஆரம்பித்தவரே கை கழுவுறாரே.. அப்படி என்னதான் பிரச்சனை?

Aadmika
Jan 03, 2023,08:40 AM IST

புதுடில்லி : பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஜோமாட்டோவின் இணை நிறுவனர் குஞ்சன் படிடர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஜோமாட்டோ நிறுவனத்தின் ஆரம்ப கால பணியாளர்களில் இவரும் ஒருவர். இந்நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை உருவாக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.


ஐடி நிறுவன ஊழியராக இருந்த குஞ்சன் படிடர், னோமாட்டோவின் தலைமை தொழில்நுட்ப பிரிவு அதிகாரியாகவும் இருந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோமாட்டோ நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவை இவர் தான் கவனித்து வந்தார். இவர் என்ன காரணத்திற்காக ராஜினாமா செய்கிறார் என்ற விபரத்தை ஜோமாட்டோ நிறுவனம் வெளியிடவில்லை.




குஞ்சனின் லிங்க்டுஇன் புரொஃபைல் அடிப்படையில் பார்த்தால், ஜோமாட்டோவின் ஒட்டுமொத்த தொழில்நுட்பங்களையும் இவர் தான் கவனித்து வந்துள்ளார். அது மட்டுமல்ல புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான பல புதிய விஷயங்களை உருவாக்கியதும் இவர் தான். 

2008 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜோமாட்டோவில் இணைவதற்கு முன் Cyient நிறுவனத்தில் சாஃப்ட்வேர்  இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் டில்லி ஐஐடி.,யில் பி.டெக் டிகிரி முடித்தவர். 


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் இந்நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரான மோஹித் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் மட்டுமல்ல ராகுல் கஞ்ஜூ, சித்தார்த் ஜவஹர், கெளரவ் குப்தா போன்ற முக்கிய உயர் அதிகாரிகளாக இருந்தவர்கள் அடுத்தடுத்து தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.


இவர்களின் ராஜினாமாவிற்கு சரியாக காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இருந்தாலும் புதிய நிறுவனங்கள் சிலவற்றுடன் ஜோமாட்டோ போட்ட தொழில்துறை ஒப்பந்த கொள்கைகளால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, அதிருப்தி இதற்கு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

முன்னணி உணவு டெலிவரி நிறுவனமாக இருக்கும் ஜோமாட்டோ, உயர் அதிகாரிகளின் அடுத்தடுத்த ராஜினாமாக்களால் ஆட்டம் காணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூட சொல்லப்படுகிறது.