கேரளாவில் மலை உச்சியில் 133 அடி உயர ஐயப்ப சிலை

Aadmika
Jan 18, 2023,02:55 PM IST
பத்தனம்திட்டா: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சுட்டிபாரா மலை மீது 133 அடி உயரத்திற்கு சுவாமி ஐயப்பனுக்கு சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.25 கோடி செலவில், 400 அடி மலையின் உச்சியில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது. சுட்டிபாரா மகாதேவா கோவில் அருகில், கோவில் நிர்வாகத்தினரால் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது. 



அடுத்த நான்கரை ஆண்டுகளில் இந்த சிலை தயாராகி விடும் என்றும், யோக நித்ர நிலையில் இருக்கும் வகையில் ஐயப்பனின் சிலை அமைக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 34 கி.மீ., தொலைவில் இருந்து கூட இந்த சிலையை பக்தர்கள் தரிசனம் செய்ய வகையில் நிர்வகிக்கும் நிலையில் இந்த சிலையை அமைக்க திட்டமிட்டுள்ளனர். பக்தர்களின் நன்கொடை, கோவில் அறக்கட்டளை நிதி ஆகியவற்றை பயன்படுத்தி இந்த சிலையை அமைக்க உள்ளனர்.

இதற்கு முன் பம்பாவில் அமைக்கப்பட்டிருந்த 30 அடி உயர ஐயப்பன் சிலையே உலகின் மிக உயரமான ஐயப்பன் சிலையாக கருதப்பட்டு வந்தது. பத்தனம்திட்டாவில் 133 அடி ஐயப்பன் சிலை அமைக்கப்பட்டால் இதுவே உலகின் மிக உயரமான ஐயப்பன் சிலையாக கருதப்படும். இந்த சிலைக்கு உள்ளே சபரிமலை ஐயப்பனின் வாழ்க்கை வரலாற்று குறிப்புக்கள் அடங்கிய மியூசியம், பந்தள அரண்மனை, பம்பா மற்றும் அழுதா நதிகள் போன்றவற்றின் மாதிரி வடிவங்களும் அமைக்கப்பட உள்ளது. 

133 அடி உயர ஐயப்பன் சிலை அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த சிலை 66 மீட்டர் சுற்றளவில் அமையும் என சொல்லப்படுகிறது. கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான பறவை சிலையான ஜடாயு சிலைக்கு அடுத்த படியாக இந்த ஐயப்பன் சிலை விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.