எதிர்பார்ப்பில்லா மனங்கள் எதிர்பார்க்கும் அன்பு எனும் நீரூற்று ..

Aadmika
Jun 15, 2023,12:51 PM IST
 சென்னை : நமக்கு பேசுவதற்கு, நடப்பதற்கு என அனைத்தையும் கற்றுக் கொடுத்து, நாம் கருவாக உருவான நாள் முதல் தங்களை மறந்து நம்மை மட்டுமே உயிராய், உலகமாய் நினைத்து பாதுகாத்து வளர்ப்பவர்கள் நம்முடைய பெற்றோர்கள். தான் பெற்ற அனுபவங்களில் இருந்து பாடம் கற்று, அதே தவறுகளை நாமும் செய்து அவர்கள் பட்ட துயரத்தையும் நாமும் பட்டு விடக் கூடாது என எத்தனை வயதானாலும் நம்மை குழந்தைகளாக மட்டுமே பாவித்து, கை பிடித்து வழிகாட்ட நம்முடைய பெற்றோர்களாலும், வீட்டில் இருக்கும் பெரியோர்களாலும் மட்டுமே முடியும்.

குழந்தைகளாக இருக்கும் வரை அனைத்திற்கும் தேவைப்பட்டவர்கள், நாம் வளர்ந்து விட்ட பிறகு முதுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் போது அவர்கள் நமக்கு தேவையற்றவர்கள் என நினைக்கும் மனம் பலருக்கு வந்து விடுகிறது. எதையும் எதிர்பார்க்காமல் நமக்காக அனைத்தையும் செய்தவர்களை, வயதாகி விட்ட ஒரே காரணத்திற்காக  அவர்களால் நமக்கு என்ன ஆதாயம் என ஆராய்ந்து பார்க்கும் மனம் சில குறுகிய மனம் கொண்டவர்களுக்கு வந்து விடுகிறது.



இன்னும் சிலர் மிருங்களாக மாறி வீட்டில் இருக்கும் முதியவர்களின் மனம் நோகும் படி பேசுவது, அவர்களை அடித்து துன்புறுத்துவது போன்ற கொடூரமான செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இத்தகைய குற்றங்களை தடுப்பதற்காகவும், முதியோர்களை பேணி பாதுகாப்பதற்காகவும் உலக சுகாதார மையம் ஜூன் 15 ம் தேதியை உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினமாக அறிவித்துள்ளது. இந்த நாளில் முதியோர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக காயத்ரி எழுதிய கவிதை வரிகள் இதோ...  

எதிர்பார்ப்பில்லா மனங்கள்
கண்களில் வழியும்  நீர் விழிகோலம் போட ...
அலங்கோலமான வாழ்க்கையில்
அவஸ்தைகளை அனுபவித்துக் கொண்டே...
அலைகடலாய் மனக்கவலையில் 
கலைந்து, ஓய்ந்து
ஓய்வெடுக்கவும் ஓரம் கிடைக்காமல்...
தளர்ந்த கால்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்து
தள்ளாடிக்கொண்டே தளராத மனதுடன்
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு முதுமை மனமும் ஓடிக்கொண்டே இருக்கிறது
விடியலைத் தேடி..
பாலைவன கானல் நீராகவே மாறிவிடுகிறது
எதிர்பார்ப்பில்லா மனங்கள் எதிர்பார்க்கும் அன்பு எனும் நீரூற்று ...
முதுமையை போற்றுவோம்..
முதுமையோடு இணைந்து வாழ்வோம் ....