சீட் கிடைக்குமா.. "கொடுத்தா போட்டியிடுவேன்".. அசராமல் அடிக்கும் விஜயதரணி.. அப்ப கன்பர்ம்டா!

Manjula Devi
Feb 27, 2024,03:57 PM IST

டெல்லி : கட்சி மேலிடம் சொன்னால் நான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என விஜயதரணி கூறியுள்ளார்.


2024 ஆம் ஆண்டுக்கான லோக்சபா தேர்தல் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன. லோக்சபா தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கு கீழ்  தேர்தல் குழுக்களை நியமித்து, தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். 


இருப்பினும் தேர்தல் நெருங்கும் வேளையில் ஒவ்வொருவராக கூட்டணியில் சேர்வதும் விலகுவதுமான அறிவிப்பை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். இதனைப் பல்வேறு கட்சியினர் ஆதரித்தும், கருத்து தெரிவித்தும் வருகின்றனர். இதனால் அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தேர்தலில் போட்டியிட எல்லோருக்குமே ஆசை இருக்கத்தான் செய்கிறது. யாருக்குத்தான் ஆசை இருக்காது.. அந்த வகையில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் ஆசையை வெளியிட்டுள்ளார் சமீபத்தில் காங்கிரஸிலிருந்து பாஜகவில் வந்து இணைந்த விஜயதரணி.




லோக்சபா தேர்தலில் போட்டியிடுவீர்களா.. என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, கட்சி மேலிடம் சொன்னால் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்று விஜயதரணி கூறியுள்ளார்.  இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது நினைவிருக்கலாம்.


காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாக இருந்தபோது  கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் கடந்த முறை போட்டியிட முயற்சி செய்தார்.அது கிடைக்காத காரணத்தால் அதிருப்தியில் இருந்து வந்தார்  விஜயதரணி. வரும் தேர்தலிலும் வாய்ப்பு இருக்காது என்ற நிலை உறுதியானதால் சமீபத்தில் காங்கிரஸை விட்டு விலகினார். பாஜகவில் இணைந்துள்ளார். 


"பெண்களுக்கு உண்டான இடம் காங்கிரஸ் கட்சியில் மறுக்கப்பட்டுள்ளது. என் ஒருத்தியை தவிர சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களே கிடையாது. கடந்த 14 ஆண்டு காலமாக என்னை கூட அவர்களால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை" என கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார் விஜயதரணி.  வரும் தேர்தலில் விஜயதரணி கன்னியாகுமரியில் போட்டியிடலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை விஜயதரணி போட்டியிடுவாரா என்பது சஸ்பென்ஸாகவே நீடிக்கும்.