நிதி நெருக்கடியால் 25 சீட்டுகளை இழக்கும் நிலையில் உள்ளோம்.. எச்.டி. குமாரசாமி

Su.tha Arivalagan
May 11, 2023,01:07 PM IST

பிதாதி, கர்நாடகா: எங்களால் பெருமளவில் பணம் செலவு பண்ண முடியவில்லை. இந்த நிலையால், வெற்றி பெறும் வாய்ப்புள்ள 25 தொகுதிகளை நாங்கள் இழக்கும் நிலையில் உள்ளோம் என்று மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் எச். டி.குமாரசாமி கூறியுள்ளார்.


கர்நாடகத்தைப் பொறுத்தவரை எம்ஜிஆர், சிவாஜியாக காங்கிரஸ், பாஜக கட்சிகள் செயல்பட்டு வரும் நிலையில் "ஜெமினிகணேசன்" கேரக்டரை செய்து வருகிறது  மதச்சார்பற்ற ஜனதாதளம். தெற்கு கர்நாடகாவில் இக்கட்சிக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளதால் கணிசமான தொகுதிகளை லம்ப்பாக பெற்று வருகிறது.



தனிப்பட்ட முறையில் ஒருமுறை கூட இந்தக் கட்சி பெரும்பான்மை பலத்தைப் பெற்றதில்லை. ஆனாலும் கூட்டணி வைத்து ஆட்சியிலும் இருந்துள்ளது. இந்த நிலையில் தற்போதைய தேர்தலிலும் இதே போன்ற ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அக்கட்சியினர் உள்ளனர்.


இந்த நிலையில் எச்.டி.குமாரசாமி தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், எங்களால் பெரிய அளவில்  செலவு பண்ண முடியவில்லை. நிதி நெருக்கடி உள்ளது. இதனால் எளிதாக வெற்றி பெறக் கூடிய 25 தொகுதிகளை இழக்கும் நிலையில் உள்ளோம். 


நிதி நெருக்கடி இருந்தாலும் கூட நல்லதொரு வெற்றியை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம். நிச்சயம் காங்கிரஸ், பாஜகவை விட சிறப்பாகவே எங்களுக்கு வெற்றி கிடைக்கும். கிங் மேக்கராக மட்டும் இருக்க மாட்டோம்.. நாங்களே கிங்காக மாறுவோம்.


பல வேட்பாளர்களுக்கு என்னால் பணம் தர முடியவில்லை. அதுதான் வருத்தமாக இருக்கிறது. அவர்களில் பலரும் வெற்றி பெறக் கூடியவர்கள்தான். ஆனால் மக்களிடையே செல்லும் அளவுக்கு எங்களால் செலவு செய்து பிரச்சாரம் பண்ண முடியவில்லை. குறிப்பாக சிக்பள்ளபுரா, தொட்டபல்லபுரா தொகுதிகளில் ஈசியாக நாங்கள் வெல்ல முடியும்.  ஆனால் என்னால் இங்கெல்லாம் பெரிதாக செலவு பண்ண முடியவில்லை.


எங்களுக்கு 120 சீட்டுகளுக்கு மேல் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன். பார்க்கலாம்.   தொங்கு சட்டசபை ஏற்பட்டால் என்ன நிலைமை என்று அதன் பிறகு பார்ப்போம். முதலில் சூழல் உருவாகட்டும். அதன் பிறகு பார்ப்போம் என்றார் குமாரசாமி.