40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.. எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு!

Su.tha Arivalagan
Jun 18, 2023,12:36 PM IST
ஆத்தூர்: அதிமுக யாரிடமும் அடிமையாக இருந்தது இல்லை.. யாருக்கும் நாங்கள் அடிமையும் இல்லை. 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் பாஜக 25 இடங்களில் வெல்லும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அது அவரது சொந்தக் கருத்து.. நான் அதற்குக் கருத்து சொல்ல முடியாது. தமிழ்நாடு மட்டுமல்ல புதுச்சேரியிலும் சேர்த்து 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும்.  இதுவே எங்களது நிலைப்பாடு. இதுவே கட்சியினரின் கருத்துமாகும்.




ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான். அதிமுகவைப் பொறுத்தவரை யாருக்கும் நாங்கள் அடிமை கிடையாது. அடிமையாகவும் நாங்கள் இருந்ததில்லை. கொள்கை வேறு கூட்டணி வேறு.. கொள்கை அடிப்படையில்தான் நாங்கள் கூட்டணி அமைப்பம் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.

நடிகர் விஜய் சென்னையில் நடந்த விழாவில் பேசியது குறித்துக் கேட்டபோது, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம் என்று கூறினார் எடப்பாடி

அதிமுக தனித்துப் போட்டியா?

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அதிமுக கூட்டணி என்று சொல்ல வந்தாரா அல்லது அதிமுக தனித்து வெற்றி பெறும் என்று சொல்ல வந்தாரா என்று தெரியவில்லை. ஒரு வேளை பாஜகவை கழற்றி விட்டு விட்டு தனித்துப் போட்டியிடும் திட்டத்தில் அதிமுக உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் பெரும் தோல்வியையே சந்திக்க நேரிடும் என்பதால் தனித்துப் போட்டியிட்டு  கணிசமான தொகுதிகளில் வென்ற பின்னர் பாஜகவுடன் கூட்டணியைத் தொடரலாம் என்ற எண்ணத்தில் அதிமுக இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கலெக்டரை தள்ளி விட்டதற்குக் கண்டனம்

இதற்கிடையே, ராமநாதபுரத்தில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும், எம்.பி. நவாஸ் கனிக்கும் இடையிலான மோதலில் மாவட்ட ஆட்சித் தலைவர் தள்ளி விடப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.




இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்டில் கூறியிருப்பதாவது:

ஒரு மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கிற்கும், நிர்வாக அமைப்புக்கும் முழுப் பொறுப்புடையவர் மாவட்ட ஆட்சியர், அத்தகைய மாவட்ட ஆட்சியரையே உதாசீனப் படுத்தி கீழே தள்ளி விடும் அளவிற்கு இந்த ஆட்சியில் திமுகவின் வன்முறை அரங்கேற்றி வருகிறது, 

மாவட்ட ஆட்சியரையே தள்ளி விட்டவர் மீது  ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை,  இதுவே அம்மாவின் அரசாக இருந்திருந்தால் இப்படி  நடைபெற்றிருக்குமா?

எதேச்சதிகாரத்தில் தன்னிலை மறந்து தரம் தாழ்ந்து நடக்கும் இந்த அரசை மக்கள் துணை கொண்டு விரட்டியடிக்கின்ற காலம் விரைவில் வரும் என்று அவர் கண்டித��துள்ளார்.

இதற்கிடையே கலெக்டரை தள்ளி விட்ட விஜய ராமு என்ற நபரை ராமநாதபுரம் போலீஸார் கைது செய்துள்ளனர்.