டிசம்பரிலேயே நாடாளுமன்றத் தேர்தலா? .. விசிக.வுக்கு வந்த திடீர் சந்தேகம்!

Su.tha Arivalagan
May 24, 2023,01:31 PM IST
சென்னை: டிசம்பர் மாதத்திலேயே நாடாளுமன்றத் தேர்தல் வருகிறதா என்று சந்தேகம் எழுப்பியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றி நாடு முழுவதும் அக்கட்சியினருக்கு பெரும் உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியை தற்போது பிற மாநிலங்களுக்கும் கொம்டு செல்ல காங்கிரஸ் தீவிரமாகியுள்ளது.



முதல் கட்டமாக எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் ஒருங்��ிணைக்க ஆரம்பித்துள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைத்து கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. மேலும்  மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்களிலும் பெரும் வெற்றியைக் குவிக்க அது திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில் விழுப்புரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா,சத்தீஸ்கர், மிஜோரம் முதலான மாநிலங்களுக்கு 2023 டிசம்பரில் தேர்தல் நடத்தப்படவேண்டும்.இவற்றில் எதிலும் பாஜக வெற்றிபெற வாய்ப்பில்லை.  மாநிலத் தேர்தல்களில் படுதோல்வியடைந்தால் 2024 பொதுத்தேர்தலிலும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதோடு மோடி அவர்களைப் பிரதமர் வேட்பாளராக்குவதிலும் சிக்கல் ஏற்படும்.எனவே, இந்த மாநிலத் தேர்தல்களோடு நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தத் திட்டமிடப்படுவதாக ஒரு ஊகம் உலவுகிறது.அது உண்மையா? என்று அவர் கேட்டுள்ளார்.

நடப்பு லோக்சபாவின் ஆயுள் காலம் அடுத்த ஆண்டு மத்தியில் முடிவடைகிறது. அந்த தேர்தலோடு சட்டசபைகளுக்கும் சேர்த்து ஒரே நாடு ஒரே தேர்தலாக நடத்த பாஜக திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே ஒரு பேச்சு நிலவுகிறது. ஆனால் ரவிக்குமாரோ, முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தல் வருமா என்று கேட்டுள்ளார்.