மீண்டும் விஜய் ஆலோசனை.. அடுத்து அரசியல்தானா.. ரசிகர்கள் "வெயிட்டிங்"

Su.tha Arivalagan
Jul 11, 2023,10:09 AM IST
சென்னை: நடிகர் விஜய் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். அரசியல் குறித்த முக்கிய முடிவை எடுக்கும் முகமாகவே இந்த சந்திப்பு என்று சொல்லப்படுகிறது.

ஒரு காலத்தில் ரஜினிகாந்த் பின்னாடியே அரசியல் சுற்றிக் கொண்டிருந்தது. அவர் எப்போது வருவார் என்று பலரும் வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தனர். அவரும் கூட, நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு எனக்குத் தெரியாது.. ஆனால் வர வேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன் என்று படத்தில் வசனம் பேசி ரசிகர்களை வெறியேற்றிக் கொண்டிருந்தார். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக அவர் அரசியலுக்கே வரவில்லை.



ரஜினிகாந்த் அரசியலுக்கு வராவிட்டாலும் கூட அவரை அரசியல் விட்டபாடில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவரது  வாயைக் கிளறி ஏதாவது பாயின்ட் கிடைக்காதா என்று ஊடககக்காரர்கள் முனைப்பு காட்டியபடியே உள்ளனர். உண்மையில் அவர்கள் எதிர்பார்த்த ரஜினி அரசியலுக்கு வரவில்லை.. ஆனால் யாருமே எதிர்பாராத கமல்ஹாசன் வந்து விட்டார்.. சிறிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு தற்போது அடங்கிப் போய் விட்டார்.

இந்த நிலையில் விஜய் பக்கம் அரசியல் பார்வை திரும்பியுள்ளது. அவர் தனது ரசிகர்களை ஒருங்கிணைத்து சிறப்பாக செயல்படுவதாக சொல்லப்படுகிறது. ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றங்களாக அவர் மாற்றி நடத்தி வருகிறார். விஜயகாந்த் பாணியில் ரசிகர்களை சுதந்திரமாக தேர்தல்களில் போட்டியிடவும் அனுமதிக்கிறார். சமீபத்தில் மிகப் பெரிய அளவில் மாநிலம் முழுவதும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்டூவில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசும் அளித்துக் கெளரவித்தார். 

அவர் அரசியலுக்கு வரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. அவர் சினிமாவுக்கு பிரேக் விடப் போவதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இந்த நிலையில் இன்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்துகிறார் விஜய். 2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு விஜய் காய் நகர்த்தி வருவதாகவும், தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இதுதொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது.

விஜய் இப்படி அடுத்தடுத்து வேகம் காட்டி வருவதால் வெயிட்டிங்கில் இருக்கும் ரசிகர்கள் சூடேறிக் காணப்படுகின்றனர்.. "தலைவா நீ வா .. நாங்க ரெடி" என்று மதுரையில் ஏற்கனவே போஸ்டர் ஒட்டி மாஸ் காட்டினர் என்பதால் ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.