ரூ.2000 நோட்டு தடை மத்திய அரசின் "மாஸ்டர் பிளான்"... விஜய் ஆன்டனி சுவாரஸ்யம்!

Aadmika
May 22, 2023,10:39 AM IST
சென்னை :  இசையமைப்பாளர் - இயக்குநர் - நடிகர் விஜய் ஆண்டனி, ரூ. 2000 நோட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் ஆன்டனி டைரக்டராக அறிமுகமாகி உள்ள பிச்சைக்காரன் 2 படம் சமீபத்தில் ரிலீசாகி உள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மூளை மாற்று அறுவை சிகிச்சையை அடிப்படையாக கொண்ட த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வறுமையை முழுவதுமாக ஒழிக்க வேண்டும். யாரும் பசியுடனும், வீடு இல்லாமலும் இருக்க கூடாது என்பதை வலியுறுத்தும் இந்த படத்தில் விஜய் ஆன்டனி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் எழுதி, இயக்கி, தயாரித்து, இசையமைத்து, எடிட் செய்து, நடிக்கவும் செய்துள்ளார் விஜய் ஆன்டனி. ரசிகர்களுடன் சேர்ந்து சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் பிச்சைக்காரன் படத்தை பார்த்துள்ளார் விஜய் ஆன்டனி.



பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆன்டனியிடம், அது எப்படி சார் பிச்சைக்காரன் படம் வரும் போது எல்லாம் மத்திய அரசு ரூபாய் நோட்டு தடையை அறிக்கிறது? 2016 ம் ஆண்டு பிச்சைக்காரன் முதல் பாகம் வெளியான சில மாதங்களில் மோடி அரசு ரூ.500, 1000 நோட்டுக்களை தடை செய்வதாக அறிவித்தது. இப்போது பிச்சைக்காரன் 2 படம் ரிலீசான அதே நாளில் ரூ.2000 நோட்டை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. ரூபாய் நோட்டு தடையால் மக்கள் நீண்ட வரிசையில் நின்று எவ்வளவு கஷ்டபடுகிறார்கள். இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறார்கள்? என கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த விஜய் ஆன்டனி, பிச்சைக்காரன் ரிலீசான சமயத்தில் 1000 ரூபாய் நோட்டு பெரிய அளவாக இருந்தால் அதில் கள்ள நோட்டு வந்திருக்கும். அது  திரும்பப் பெறப்பட்டிருக்கும். எளிதில் பதுக்கக் கூடிய வகையில் இருக்கும் உயர் பணமதிப்பு கொண்ட ரூ.500, 1000 நோட்டுக்களை தான் மத்திய அரசு புழக்கத்தில் இருந்து தடைசெய்தது. இப்போதும் 2000 ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்பட்டுள்ளது. 

என்னை பொறுத்த வரை ரூ.2000 நோட்டுக்களை மத்தியஅரசு வெளியிட்டதும், இப்போது திரும்பப் பெற்றதும் கூட அவர்களின் மாஸ்டர் பிளான் என்றே நினைக்கிறேன். ரூ.2000 நோட்டை திரும்ப பெறுவதாக அரசு அறிவித்ததும் எனக்கும் முதலில் கஷ்டப்பட்டமாக இருந்தது. பிறகு யோசித்த பார்த்த போது தான் உண்மை புரிந்தது. இந்த ரூபாய் நோட்டு தடையால் சாமானிய மக்கள் எந்த வகையில் பாதிக்கப்பட போவதில்லை. கறுப்பு பணம் பதுக்குவோருக்கு தான் பிரச்சனை.

ரூ.500, 1000 நோட்டுக்களை தடை செய்து விட்டு ரூ.2000 நோட்டுக்களை வெளியிட்டனர். இதனால் பதுக்குவதற்கு எளிதாக இருக்கும் என கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் ரூ.2000 நோட்டாக பதுக்கி வைத்திருப்பார்கள். இப்போது அதுவும் திரும்பப் பெறப்படுகிறது என அறிவித்துள்ளதால் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் தான் சிக்குவார்கள். பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், ரூ.2000 நோட்டுக்களை பதுக்கி வைத்திருக்கும் பிகிலிகள் தான் சிக்குவார்கள் என்றார் விஜய் ஆன்டனி.

பிச்சைக்காரன் 2 படத்தில் காவ்யா தாபர், யோகி பாபு, ராதா ரவி, ஒய்.ஜி.மகேந்திரா, தேவ் கில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிச்சைக்காரன் படத்தில் 500, 1000 ரூபாய் நோட்டு தடை பற்றிய சீன் வைக்கப்பட்டிருந்ததால், இந்த படத்தில் என்ன சொல்லி இருக்கிறார் விஜய் ஆன்டனி என பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக படத்தை பார்த்து வருகின்றனர்.