மீண்டும் தள்ளி போகிறதா சூர்யா - வெற்றிமாறன் இணையும் வாடிவாசல்?

Aadmika
Jun 12, 2023,02:57 PM IST
சென்னை : நடிகர் சூர்யா ஒரே சமயத்தில் பல படங்களில் கமிட்டாகி ரொம்பவே பிஸியாக நடித்து வருகிறார். அனைத்துமே பெரிய படங்கள் என்பதால், ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாகவும் உள்ளன.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 10 மொழிகளில் 3டி வெர்சனில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதில் சூர்யா பல ரோல்களில் நடித்துள்ளார். அதே சமயம் டைரக்டர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்க உள்ளார். 

வாடி வாசல் படத்தின் அறிவிப்பு 2020 ம் ஆண்டே வெளியிடப்பட்டது. ஆனால் இப்போது வரை படத்தின் ஷூட்டிங் துவங்கப்படவில்லை. இருந்தாலும் ரசிகர்களிடம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறையாமல் உள்ளது. சூர்யா கங்குவா படத்தையும், வெற்றிமாறன் விடுதலை படத்தையும் நிறைவு செய்த பிறகு வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட உள்ளதாக இந்த ஆண்டு துவக்கத்தில் சொல்லப்பட்டது.  



ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி, வெற்றிமாறன் விடுதலை 2 படத்தின் வேலைகளில் பிஸியாக இருப்பதால் கங்குவா படத்தை நிறைவு செய்த பிறகு மற்றொரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம் சூர்யா. விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் 2023 ம் ஆண்டே ரிலீஸ் செய்ய முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது இதை 2024 ம் ஆண்டின் துவக்கத்திற்கு தள்ளி வைத்துள்ளனர்.

இதனால் விடுதலை 2 படத்தின் வேலைகள் முடிந்த பிறகு தான் வாடிவாசல் படத்தின் வேலைகள் துவங்கப்பட உள்ளது. இதனால் இந்த படம் மேலும் தள்ளி போக உள்ளது. மற்றொரு புறம் கங்குவா படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் நிறைவடைய உள்ளது. கங்குவா மற்றும் வாடிவாசல் படங்களுக்கு இடையேயான இடைவெளியை நிறைவு செய்வதற்காக சூரரைப் போற்று டைரக்டர் சுதா கொங்கரா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்க போகிறாராம். 

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளாராம். இந்த படத்தை நிறைவு செய்த பிறகு தான் வாடிவாசல் படங்களுக்கான வேலைகளை சூர்யா கவனிக்க உள்ளாராம்.