அமெரிக்காவில் துயரம்.. 7 பேரை சுட்டுக் கொன்று.. தானும் தற்கொலை செய்த நபர்!

Su.tha Arivalagan
Jan 06, 2023,11:44 AM IST

லாஸ் ஏஞ்சலெஸ்: 1984ம் ஆண்டு சென்னையில் ஜெயப்பிரகாஷ் என்பவர் தனது சகோதரி குடும்பத்தை மொத்தமாக தீர்த்துக் கட்டிய சம்பவம் போல அமெரிக்காவில் ஒரு பயங்கரம் அரங்கேறியுள்ளது.




கடந்த 1984ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் விருகம்பாக்கத்தில் உள்ள  தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார்.  அப்போது தனது சகோதரி, அவரது கணவர், குழந்தைகள் உள்பட மொத்த குடும்பத்தினர் 9 பேரை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றார். அப்போது இந்த வழக்கு தமிழகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. ஆனால் இங்கு சகோதரிக்குப் பதில், மனைவி மற்றும் குழந்தைகளை சுட்டுக் கொன்றுள்ளார் இந்த அமெரிக்கர்.


எனோச் நகரில் உள்ள உடா  குடியிருப்புப் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்த நபரின் மனைவி விவாகரத்து கோரி விண்ணப்பித்திருந்தார். இதனால் கணவன் - மனைவி இடையே பிரச்சினை வெடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் தனது மனைவி உள்பட வீட்டில் இருந்த  7  பேரை சுட்டுக்  கொன்றார். இதில் 5  குழந்தைகள் அடக்கம். கடைசியில் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலையும் செய்து கொண்டார்.


இறந்த 5 குழந்தைகளில் ஒன்றுக்கு 4 வயதுதான் ஆகிறது என்பது பரிதாபமானது.  கொலை செய்து தற்கொலையும் செய்து கொண்ட நபரின் பெயர் மிக்கேல் ஹைட் என்றும் அவருக்கு 42 வயது என்றும் தெரிய வந்துள்ளது.


கொலை  செய்யப்பட்டவர்கள்  - மிக்கேலின் மனைவி, மாமியார், மிக்கேலின் 5 குழந்தைகள் (3 பெண்கள்,  2 பையன்கள், 4 முதல் 17 வயது வரையிலானவர்கள்)