முதியவரின் உடலை ஃபிரீஷரில் மறைத்து வைத்து, பென்சன் பணத்தை ஆட்டையை போட்ட பலே திருடன்

Aadmika
May 04, 2023,01:01 PM IST
லண்டன் : முதியவரின் உடலை ஃப்ரீசரில் மறைத்து விட்டு, அவரின் பென்சன் பணத்தை இஷ்டத்திற்கு செலவழித்த பலே திருடன் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிக்கி உள்ள சம்பவம் பிரிட்டனில் நடந்துள்ளது.

ஜான் வைன்ரைட் (71) என்பவர் 2018 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உயிரிழந்துள்ளார். ஆனால் அவரது உடல் 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் 22 ம் தேதி தான் வீட்டின் ஃபிரீஷரில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் இறந்த பிறகு அவரது உடல் ஃபிரீஷரில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.



வைன்ரைட்டும், டேமியன் ஜான்சன் (52) என்பவரும் ஒரே குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். வைன்ரைட், பென்சன் வாங்கிக் கொண்டிருந்துள்ளார். அவர் இறந்த பிறகு அவரது வங்கி விபரங்களை பயன்படுத்தியும், ஏடிஎம் கார்டினை பயன்படுத்தியும் டேமியன் ஜான்சன், பல முறை ஷாப்பிங் செய்தும், பணம் எடுத்தும் இருந்துள்ளான். வைன்ரைட்டின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை தனது பெயருக்கும் மாற்றி உள்ளான்.

வைன்ரைட்டின் வங்கி கணக்குகளை, டேமியன் ஜான்சன் பயன்படுத்தி வந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்துள்ளனர். அது தன்னுடைய பணம் தான் என்றும், தான் பணத்தை திருடவில்லை என்றும் தொடர்ந்து மறுத்து வந்தான் ஜான்சன். இருந்தும் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் வைன்ரைட்டின் வங்கி கணக்கு விபரங்களை பயன்படுத்தி, அவரது கணக்கில் இருந்து பணத்தை அபகரித்ததை ஜான்சன் ஒரு வழியாக சமீபத்தில் ஒப்புக் கொண்டான்.

ஆனால் வைன்ரைட் எப்படி இறந்தார்? இயற்கையாக இறந்தாரா அல்லது பணத்திற்காக ஜான்சன் அவரை கொலை செய்தாரா என்ற சந்தேகம் இருந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த பிரிட்டன் நீதிபதி, வழக்கு விசாரணையை நவம்பர் 7 க்கு ஒத்திவைத்துள்ளார். நீதிபதி நடத்திய விசாரைணயின் போது, வைன்ரைட்டிற்கு வரும் நிதிகளை தானே கையாண்டு வந்ததால், அவரது வங்கி கணக்குகளின் விபரம் தனக்கு தெரியும் என ஜான்சன் கூறி உள்ளான். இதனை அடுத்து ஜான்சன் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளான்.