த்ரிஷா, ஜெயம் ரவியின் ட்விட்டர் பக்கத்திலிருந்து ப்ளூ டிக் நீக்கம்.. ஏன் என்ன நடந்தது?

Aadmika
Apr 17, 2023,04:32 PM IST
சென்னை : நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் ஜெயம் ரவியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக் திடீரென அகற்றப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் ரசிகர்கள் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

கிட்டதட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களின் ட்ரீம் கேர்ளாக வலம் வந்து கொண்டிருப்பவர் த்ரிஷா. விஜய், அஜித் உள்ளிட்ட அனைத்து இளம் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்தார்.



பொன்னியின் செல்வன் முதல்வர் பாகத்தில் குந்தவையாக த்ரிஷாவும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்திய தேவனாக கார்த்தியும், ஆதித்ய கரிகால சோழனாக விக்ரமும் நடித்திருந்தனர். இந்த படத்தின் ப்ரொமோஷனுக்காக பொன்னியின் செல்வன் முதல் பாக ரிலீஸ் சமயத்தில் தங்களின் கேரக்டரை பெயரை ட்விட்டரில் இவர்கள் மாற்றினார்கள். பிறகு மீண்டும் தங்களின் உண்மையான பெயர்களை மாற்றினார்கள். தற்போது பொன்னியின் செல்வன் படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.

ஏப்ரல் 28 ம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீசாக உள்ளதால், இதற்கான ப்ரொமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. பல முக்கிய நகரங்களுக்கும் பொன்னியின் செல்வன் டீம் சென்று வருகிறது. சோஷியல் மீடியாவிலும் வித்தியாசமாக ப்ரொமோஷன் நடந்து வருகிறது. இந்நிலையில் த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் மீண்டும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் தங்களின் பெயர்களை குந்தவை என்றும், அருள்மொழி வர்மன் என்றும் மாற்றி உள்ளனர்.

இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் புதிய விதிகளின் படி அவர்களின் ட்விட்டர் கணக்கில் இருந்த ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் அகற்றி உள்ளது. இதனால் பதறிப் போன த்ரிஷா, மீண்டும் தனது பெயரை த்ரிஷ் என்றே மாற்றி விட்டார். ஆனாலும் ப்ளூ டிக் மீண்டும் அளிக்கப்படவில்லை. இதே போல் ஜெயம் ரவியின் ப்ளூ டிக்கையும் ட்விட்டர் நீக்கி உள்ளது. இதனால் ரசிகர்கள், ட்விட்டர் கணக்கு வைத்துள்ள பிரபலங்கள் பலரும் பதறிப் போய் உள்ளனர். ப்ளூ டிக்கை மீண்டும் பெற என்ன செய்வதென தெரியாமல் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.